அரசு பணியிடங்களுக்கு வயது தளர்வு அளிக்க அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கோரிக்கை
புதுச்சேரி : அரசு பணியிடங்களுக்கு வயது தளர்வு அளித்து பணியிடங்களை நிரப்ப அனிபால் கெண்ணடி எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் கவர்னர், முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை:புதுச்சேரியில் பல்வேறு துறையில் உள்ள காலி இடங்களை நிரப்ப தி.மு.க., வலியுறுத்தியது. இதையடுத்து அரசு பல துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப அரசாணை பிறப்பித்துள்ளது. அரசுப்பணிகளுக்கு வயது தளர்வு அளிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உள்ளிருப்பு பணி செய்யும் ஊழியர்களுக்கு வயது தளர்வு அளிக்கலாம் என அரசுக்கு அறிவறுத்தல் தீர்ப்பு பெறப்பட்டது. ஆனால் அதிகாரிகள் இதை ஏற்காமல் மேல் முறையீடு செய்ய அரசுக்கு கோப்பு அனுப்பியது கண்டனத்திற்கு உரியது.ரயில்வே துறையில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்ப ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதில் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மக்களுக்கு வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நன்மை அளிக்கின்ற விஷயங்களில் அரசு அதிகாரிகள் மேல் முறையீடு செய்வது இளைஞர் விரோத போக்காகும். வயது தளர்வு சம்பந்தமாக புதுச்சேரி அரசின் சட்டத்துறை நல்ல வழிகாட்டுதல் அளித்துள்ளதையடுத்து, அதனை கவர்னர், முதல்வர் ஏற்று நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு வயது தளர்வு அளிக்க வேண்டுமென தி.மு.க., சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.