மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஒத்துழைக்க முதல்வர் வேண்டுகோள்
புதுச்சேரி: புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என, முதல்வர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து சட்டசபை அலுவலகத்தில் அவர், கூறியதாவது: மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை துவங்கி இருக்கிறது. புதுச்சேரியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, சுய கணக்கெடுப்பில் கலந்துகொண்டு தங்களை பற்றிய விவரங்களை முழுமனதுடன் கொடுக்க வேண்டும். அதன் மூலம் அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடையும். சுய கணக்கொடுப்பு என்பது நம்முடைய விவரங்கள் அனைத்தையும் நாமே தெரிவிப்பதால், இதில் எந்த வித தவறும் ஏற்படாது. அதன் மூலம் மத்திய அரசு, மாநில அரசுக்கு தேவையான நிதி ஒதுக்குவது எளிதாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நம்முடைய சுய நிலை மற்றும் வாழ்வாதாரம் பற்றி அறிந்து கொள்கின்ற வாய்ப்பினை உருவாக்கும். எனவே கணக்கெடுப்பிற்கு வரும் அரசு துறையினருக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்றார்.