விரைவில் அரிசியுடன் கோதுமை; முதல்வர் ரங்கசாமி தகவல்
புதுச்சேரி; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.விழாவில், முதல்வர் ரங்கசாமி பங்கேற்று பேசியதாவது; புதுச்சேரி மாநிலத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு 16 சதவீதம் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் முழுமையான நிதியை பெற்று நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.பட்டியலின மக்களுக்கு கல்வீடு கட்டும் திட்டம், ரூ. 7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். பிரதமர் கல்வீடு கட்டும் திட்டத்துடன் இணைந்து இந்த நிதி வழங்கப்படுகிறது. 600 சதுர அடியில் ரூ. 7 லட்சத்தில் கழிவறை வசதியுடன் வீடு கட்டி முடிக்கலாம். ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை தனியார் பள்ளிகளில் படிக்கும் பட்டிலின மாணவர்களுக்கு அந்த பள்ளிகள் கேட்கும் கட்டணத்தை அரசு முழுதுமாக செலுத்தும். மருத்துவம் போன்று, 10 சதவீதம் இடஒதுக்கீடு அனைத்து படிப்புகளிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெஸ்ட் புதுச்சேரிக்கான அத்தனையும் செய்து கொண்டிருக்கின்றோம். கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசின் நிதியுதவியுடன் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை இல்லாமல் கூடுதலாக ரூ.200 கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது. அதனை முழுதுமாக செலவு செய்ய அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் அழைத்து பேசியுள்ளோம். தற்போது அரிசி வழங்கப்படுகிறது. விரைவில் அரிசியுடன் கோதுமையும் வழங்கப்படும்' என்றார்.