உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.சி.சி., மாணவர்கள் சாகச பயணம் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு

என்.சி.சி., மாணவர்கள் சாகச பயணம் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு

புதுச்சேரி : என்.சி.சி., மாணவர்களின் பாய்மரப் படகு கடல் சாகச பயணத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.டில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பையொட்டி என்.சி.சி., மாணவர்கள் புதுச்சேரியில் இருந்து காரைக்கால் சென்று, மீண்டும் புதுச்சேரிக்கு திரும்பும் பாய்மரப் படகு கடல் சாகச பயணம் (சாகர் சங்க்ரம்) தொடக்க விழா நேற்று நடந்தது. கடலுார் மற்றும் புதுச்சேரி என்.சி.சி., கப்பற்படை இணைந்து நடத்தும் இந்த சாகச பயணத்தை தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று முதல்வர் ரங்கசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். பாஸ்கர் எம்.எல்.ஏ., மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் மற்றும் என்.சி.சி., அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த 302 கி.மீ., துார கடல் சாகச பயணத்தை புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த என்.சி.சி., கடற்படை பிரிவை சேர்ந்த 25 மாணவிகள் உள்ளிட்ட 60 பேர், மூன்று பாய்மரப் படகுகளில் 10 நாட்களில் கடக்க உள்ளனர். இவர்களுடன் மூன்று கடற்படை அதிகாரிகள் மற்றும் என்.சி.சி., அலுவலர்கள் உள்ளனர்.புதுச்சேரியில் புறப்பட்ட இக்குழுவினர் கடலுார், பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக காரைக்காலை அடைகின்றனர். அங்கிருந்து புறப்பட்டு அதே வழியாக வரும் 20ம் தேதி புதுச்சேரி வந்தடைகின்றனர். பயணத்திற்கிடையே இக்குழுவினர் செல்லும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரத்த தான முகம், மரம் நடுதல், துாய்மைப்பணி என பல சமூக பணிகளை மேற்கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ