மகளிர் காங்., நிர்வாகிகளின் வீடியோவை சமுக வலை தளத்தில் இருந்து நீக்க புகார்
புதுச்சேரி: மகளிர் காங்., நிர்வாகிகளின் வீடியோவை சமுக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என, சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசின் மின்சார கட்டண உயர்வை கண்டித்து, புதுச்சேரி இண்டி கூட்டணி சார்பில், கடந்த 4ம் தேதி போராட்டம் நடந்தது. இதில், மாநில மகளிர் காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மகளிர் காங்., தலைவி நிஷா, பத்திரிக்கையாளர்களிடம் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசின் அட்டூழியங்கள் பற்றி பேட்டி அளித்தார். அந்த பேட்டியின் வீடியோ படங்களை ஜே.சி.எம்., மக்கள் பேரவைக்கு ஆதரவாக பேட்டி கொடுப்பது, போன்று சித்தரித்து, பேரவை நிர்வாகிகள் சிலர் தவறான வதந்திகளை சமுக வலைதளங்களில் வெளியிட்டு, பரப்பி வருகின்றனர். அதற்கு, ஜே.சி.எம். பேரவை அமைப்பாளர் சார்லஸ் மார்ட்டின் மற்றும் ரீகன் ஜான்குமார் ஆகிய இருவரும், மகளிர் காங்., நிர்வாகிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், சமுக வலைதளங்களில் இருந்து வீடியோ, படங்களை நீக்கி, பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மகளிர் காங்., தலைவி நிஷா தலைமையில், மகளிர் அணி நிர்வாகிகள் நேற்று சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜனிடம் புகார் அளித்தனர்.