அமைச்சரை கண்டித்து காங்., ஊர்வலம்
புதுச்சேரி: வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வலியுறுத்தி, புதுச்சேரி காங்., சார்பில், கண்டன ஊர்வலம் நடந்தது.பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே தொடங்கிய ஊர்வலத்திற்கு காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். ஊர்வலத்தில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காங்., சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், வழக்கறிஞர் அணி தலைவர் மருதுபாண்டியன், முன்னாள் கவுன்சிலர் குமரன், மாநில செயலாளர் தனுசு உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலம் அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக வந்து, மாதா கோவில் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரின் குடும்பத்தினருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோத சந்தன எண்ணைய் தொழிற்சாலை, போலி மதுபான ஆலையை நடத்தியது தமிழக போலீசார் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு புதுச்சேரி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என, கோஷமிட்டனர்.