ஆன்லைன் பட்டாசு விளம்பரத்தை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
புதுச்சேரி : புதுச்சேரி இணையவழி போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கம் நாளுக்கு நாள் பொதுமக்களிடையே பெருகி வருகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் வீட்டில் இருந்தே பொருட்களை வாங்க பொது மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதில் நடக்கும் மோசடிகளை மறந்து விடுகின்றனர். இதில் பட்டாசு பொருட்களும் விதி விலக்கல்ல. இதனை தடுக்க இணைய வழி காவல் துறையினர் தொடர்ச்சியான எச்சரிக்கை மற்றும் அறிவுரை விடுத்தும் மீண்டும் போலியான ஆன்லைன் பட்டாசு விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி பணத்தை இழந்து வருகின்றனர். இந்த வருட தீபாவளி பண்டிகை வருவதற்கு சில வாரங்களே உள்ள நிலையில் நிறைய புகார்கள் புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது. உண்மையான பட்டாசு விற்பனையாளர்கள் பெயரில் போலியான வலைத்தளங்களை உருவாக்கி இணைய வழி குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே பொதுமக்கள் இணையத்தில் எந்த பொருளை வாங்கும் முன்பும் அதனுடைய உண்மை தன்மையையும்அதை விற்பவருடைய முழு விபரங்களையும் நன்கு சோதித்து பார்த்தபின் வாங்க வேண்டும். இணைய வழி விளம்பரங்களை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம். இணைய வழி குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்கவும் அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழி காவல் நிலையத்தில் இலவச தொலைபேசி எண் 1930 மற்றும் 0413-2276144, 9489205246, cybercell-py.gov.inமின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம். www.cybercrime.gov.inஇணையத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.