குடிநீரில் டி.டி.எஸ்., அதிகம் நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
புதுச்சேரி: நகர பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தினார். உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு நேற்று கோரிக்கை மனுவுடன் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது அவர், நகர பகுதி மக்களுக்கு பொதுப்பணித் துறை மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. டி.டி.எஸ்., அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் இருந்து நகர பகுதிக்கு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். பின் நேரு எம்.எல்.ஏ., கூறியதாவது: குடிநீர் மோசமாக உள்ளது. டி.டி.எஸ்., அதிகரித்துள்ளது. உப்பு கரிக்கிறது. போதாக்குறைக்கு குடிநீரில் பாக்டீரியாக்கள் தாக்கம் உள்ளது. குடிநீரை அருந்துபவர்கள், வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குடிநீரை குடிக்க வேண்டாம் என்று டாக்டர்களே சொல்லுகின்றனர். தரம் இல்லாத குடிநீரை தொடர்ந்து குடித்தால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். அதிகாரிகள் பாதுகாப்பான குடிநீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர். எனவே தான் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து நகர பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
நிரந்தர சபாநாயகர்
நேரு எம்.எல்.ஏ., கூறும்போது, ‘ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களை கடந்தும் இன்னும் நிரந்தரமாக சபாநாயகர் நியமிக்கப்படவில்லை. சட்டசபைக்கு கூடுவதற்கு முன் அரசு கொறடா நியமிக்க வேண்டும். துணை சபாநாயகரும் இல்லை. கோரிக்கை மனுவினை யாரிடம் கொடுப்பது என்று எம்.எல்.ஏக்களுக்கு தெரியவில்லை. தற்காலிக சபாநாயகர் சிறப்பாக செயல்படுகிறார். அவருக்கே நிரந்தர சபாநாயகராக நியமிக்கலாம்’ என்றார்.