லைசென்ஸ் கிடைப்பதில் சிக்கல் வாகன ஓட்டிகள் தவிப்பு
புதுச்சேரி: லைசென்ஸ் கிடைப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பரிதவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், இரண்டாவது முறை சிக்கினால் இருமடங்கு அபராதமும் விதிக்க இடம் உண்டு. இதற்கு பயந்து பலரும் புதுச்சேரி போக்குவரத்து துறையில் லைசென்ஸ் எடுக்க விண்ணப்பிக்கின்றனர். காலாவதியாகும் லைசென்ஸை புதுப்பிக்கவும் ஆர்வம் காட்டுகின்றனர். அப்படி விண்ணப்பிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சமீபகாலமாக லைசென்ஸ் உடனடியாக கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல முறை அலைந்தாலும் லைசென்ஸ் கிடைக்கவில்லை என வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர். குறிப்பாக, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் எவருக்கும் புதிய ஓட்டுநர் உரிமம் கிடைக்கவில்லை. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது, புதுச்சேரி போக்குவரத்து துறையில் ஓட்டுநர் பழகுநர் உரிமம் உள்பட 25 சேவைகள் வழங்கப்படுகின்றன. ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான நிறுவனத்தின் ஒப்பந்தக்காலம் கடந்த மாதம் 6ம் தேதி முடிவடைந்தது. அதன் பிறகு புதிய நிறுவனத்திற்கான டெண்டர் விடபட்டது. தேர்வு செய்யப்பட்ட புதிய நிறுவனத்தின் அனுமதிக்காக கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. புதிய நிறுவனம் இன்னும் முழுமையாக பணிகளை ஏற்கவில்லை. இதன் காரணமாகவே இந்த தேக்கம். அடுத்த வாரம் அனைத்து பிரச்னைகளும் சரியாகிவிடும் என்றனர். ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பித்துள்ளேன். போக்குவரத்து துறையில் தான் ஓட்டுநர் உரிமம் தரவில்லை என்று கூறினாலும் போலீசார் ஏற்றுக்கொள்வதில்லை. இந்தா ரசீதை பிடி; கட்டு அபராதத்தை என்று கறாராக சொல்லி வாகன ஓட்டிகளை நோகடித்து வருகின்றனர்.
விலக்களிக்கப்படுமா?
ஓட்டுநர் உரிமம் வழங்குவது காலதாமதமாகி வரும் நிலையில், பரிதவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். தணிக்கையின்போது லைசென்ஸ்க்கான விண்ணப்பித்துள்ள ஆவணங்களை வாகன ஓட்டிகள் காட்டினால், அவர்களுக்கு அபராதம் விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்க போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட வேண்டும்.