ரேஷன் கார்டுகளுக்கும் இ-கே.ஒய்.சி., வருகிறது: பொதுசேவை மையத்திடம் பணி ஒப்படைப்பு
புதுச்சேரி: ரேஷன் கார்டுகளின், இ-கே.ஓய்.சி., சரிபார்ப்பு பொது சேவை மையங்களின் வாயிலாக ஆய்வு செய்யப்பட உள்ளது.புதுச்சேரியில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ரேஷன் கடைகள் மீண்டும் திறந்து, இலவச அரிசி, குடிமை பொருள் வழங்கல் துறை மூலமாக வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இதற்கு, சில நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ரேஷன் கடைகளை திறப்பதற்கான ஏற்பாட்டில், குடிமை பொருள் வழங்கல் துறை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.உணவு தானியங்களை விநியோகிப்பதில் எவ்வித முறைகேடும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும், உணவு பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த அரசால் ஒரு வலுவான அமைப்பு நிறுவப்பட வேண்டும் என மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது. எனவே ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப தலைவர், உறுப்பினர்களின் ஆதார் எண், பையோமெட்ரிக் பதிவுகள் அனைத்தும் சரிபார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களின் விவரங்கள் சரியாக இருக்கும் வகையில் இ--கே.ஒய்.சி., பதிவு செய்து கொள்ள வேண்டும் என மத்திய உணவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.அதனையொட்டி, புதுச்சேரி மாநிலத்திலும் ரேஷன் கார்டுகளில் இ-கே.ஒய்.சி., சரிபார்க்கும் நடவடிக்கையை குடிமைப் பொருள் வழங்கல் துறை முடுக்கிவிட்டுள்ளது. இப்பணியை மேற்கொள்ள பொது சேவை மையத்தை புதுச்சேரி அரசு தேர்வு செய்துள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இ-கே.ஒய்.சி., செய்யப்படுகின்றது. ஆனால் புதுச்சேரியில் கடந்த 6 ஆண்டுகளாக ரேஷன் கடைகள் செயல்படாததால், இ-கே.ஒய்.சி., சரிபார்ப்பதற்கான அடிப்படை கட்டமைப்புகள் இல்லாததால், கைரேகை பதிவு, ஆதார் எண் சரிபார்ப்பிற்கு பொது சேவை மையங்களை பயன்படுத்தி கொள்ள அரசு முடிவு செய்து, இந்த திருத்தத்தினை கொண்டு வந்துள்ளது.மத்திய அரசின் உணவு பாதுகாப்பு அமைச்சத்தின் உத்தரவின்படி இ-கே.ஒய்.சி., சரிபார்ப்பினை ஆன்லைன் அல்லது நேரில் செய்யலாம். ஆன்லைனில் செய்ய முடியாவிட்டால், அருகிலுள்ள பொதுச் சேவை மையத்தில் உங்கள் ஆதார் மற்றும் ரேஷன் கார்டு விவரங்களைக் கொடுத்து எளிதாக அப்டேட் செய்து கொள்ளலாம்.
ஆரம்ப நிலையில் தான் இருக்கு
இ-கே.ஒய்.சி., சரிபார்ப்பு நடைமுறைகளை அரசு இன்னும்முழுமையாக வெளியிடவில்லை. இதுகுறித்து குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், கே.ஓய்.சி., சரிபார்ப்பு ஆரம்ப நிலையில் மட்டுமே உள்ளது. பொது சேவை மையங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சரிபார்ப்பு பணியை ஆன்லைன் அல்லது ஆப் லைனில் செய்வதற்கான வழிமுறை விரைவில் வெளியிடப்படும் என்றனர்.