மழைக் காலத்தில் மின் விபத்துகளை தவிர்க்க மின்துறை ஆலோசனை
புதுச்சேரி: மழைக்காலங்களில் மின் விபத்துகளை தவிர்ப்பது குறித்து மின்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மின் கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி மற்றும் ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குளையும் கட்டக் கூடாது. மின்சார மேல்நிலைக் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்ற மின்துறை அலுவலர்களை அணுகவும். மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் தொட முயற்சிக்க வேண்டாம். உடனடியாக மின்துறை அலுவலர்களுக்கு 1800 425 1912 என்ற எண்ணில் தெரிவிக்க வேண்டும். இடி, மின்னல் இருக்கும்போது டி.வி., கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். டிரான்ஸ்பார்மர்கள், மின் இழுவைக் கம்பிகள் ஆகியவற்றை தொடக்கூடாது. கனரக வாகனங்களை மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் அருகே நிறுத்தி பொருட்களை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீரை கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். தீயணைப்பு துறையின் உதவியை நாடவும். குளியல் அறையில் ஈரமாக வாய்ப்புள்ள இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது.நில இணைப்பை சரிபார்த்து கொள்ள வேண்டும். அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்தாரர் மூலமாக மட்டுமே மின்சார ஒயரிங் வேலைகளை செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.