விவசாயிகள் தேர்வு பட்டியல் ஆட்சேபனை தெரிவிக்கலாம்
புதுச்சேரி: மண்புழு உரத்தொட்டி மற்றும் உரப்படுகையை மானிய விலையில் அமைப்பதற்கான விவசாயிகள் தேர்வு பட்டியலில் ஆட்சேபனை இருந்தால், வரும் 6ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். இதுகுறித்து, இணை வேளாண் இயக்குநர் சண்முகவேலு விடுத்துள்ள செய்திக்குறிப்பு; புதுச்சேரி பிராந்திய தோட்டக்கலை விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் திட்டத்தின் மூலம் மானிய விலையில் மண்புழு உரம் தொட்டி மற்றும் மண்புழு உரப்படுகை அமைப்பதற்கு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பெயர் பட்டியல், சமுதாய தணிக்கைக்காக, உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் நேற்று ஒட்டப்பட்டுள்ளது. மேலும், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை https://agri.py.gov.inஇணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் ஆட்சேபனை இருப்பின் வரும் 6ம் தேதிக்குள் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் உள்ள கூடுதல் வேளாண் இயக்குநர் (தோட்டக்கலை), அலுவலகத்தில் எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம்.