முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விழாக்கால மானிய தொகை ரூ.5,000
புதுச்சேரி : முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச விழாக்கால மானியத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. புதுச்சேரி முப்படை நலத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி முப்படை நலத்துறை சார்பில், முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களின் விதவையர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக 60 வயது நிறைவுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையர்களுக்கு 2024-25 ஆண்டிற்கான விழாக்கால மானியத் தொகை ரூ. 5,000 வழங்க ஒப்புதல் பெறப்பட்டு பயனாளிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இது சம்மந்தமாக பயனாளிகள் இத்துறை வழங்கிய அசல் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு விபரத் துடன் இவ்வலுவலகத்திற்கு வரும் 24ம் தேதி முதல் 10ம் தேதிக்குள் நேரில் வர வேண்டும். வரும்போது, கையொப்பமிட்டு அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் பிரதியையும் சமர்ப்பிக்க வேண்டுகிறோம். காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் மண்டலங்களின் பயனாளிகள் மண்டல நிர்வாக அலுவலகத்திற்கு சென்று மேற்கூறிய விபரங்களை சமர்ப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு புதுச்சேரி முப்படை நலத்துறை தொலைபேசி 0413-2253107, 2250575 என்ற தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.