பாகூரில் பதிவு செய்த எப்.ஐ.ஆர்.,வளவனுாருக்கு மாற்றம்
பாகூர்,: கரையாம்புத்துார் அருகே சவ ஊர்வலத்தை மறித்து தகராறு செய்த சம்பவம் தொடர்பாக, பதிவு செய்யப்பட்ட ஜீரோ எப்.ஐ.ஆர்., வளவனுார் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பாகூர் அடுத்த கரையாம்புத்துார் நேரு நகரை சேர்ந்தவர் சபரிமணிகண்டன், 51. இவரது தாய் சகுந்தலா கடந்த சில நாட்களுக்கு முன், உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் கடந்த 13ம் தேதி நடந்தது. ஊர்வலம் களிஞ்சிக்குப்பம் கிராமத்தின் வழியாக சென்ற போது,தரணி, வீரமணி, அய்யப்பன்கரன் ஆகிய மூன்று பேரும், தடுத்து நிறுத்தி தகராறு செய்து தாக்கி உள்ளனர். போலீசார் அங்கு சென்றதை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.இது குறித்து சபரிமணிகண்டன்,கரையாம்புத்துார் புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக, போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்த இடம் தமிழக எல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஜீரோ எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, இந்த வழக்கை வளவனுார் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி உள்ளனர்.