ஒப்பந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை மதிப்பெண் அரசாணை
புதுச்சேரி: ஆசிரியர் பணி நியமனத்தின் போது ஒப்பந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை மதிப்பெண் அளிக்கும் வகையில் அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், பாலசேவிக்காக்கள், கணினி அறிவியல் பயிற்றுநர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டி இந்தாண்டு துவக்கத்தில் தொடர் போராட்டம் நடத்தினர். ஆனால் அரசு இவர்களை, பணி நிரந்தரம் செய்யாமல், ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கியது. இவர்களுக்கு ஆசிரியர் பணி நியமனத்தின்போது முன்னுரிமை மதிப்பெண் அளிக்கும் வகையில் அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கவர்னர் உத்தரவின்பேரில் பள்ளி கல்வித்துறையின் சார்பு செயலர் வெர்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ள ஆணை: அரசு பள்ளிகளில் தற்காலிகமாக பணியாற்றிய அனுபவமுள்ள ஆசிரியர்களுக்கு (விரிவுரையாளர், பட்டதாரி ஆசிரியர், பாலசேவிகா, கணினி அறிவியல் பயிற்றுநர்) அவர்கள் பணிபுரிந்த ஒவ்வொரு முழு ஆண்டிற்கும் ஒரு சவீதம், அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை 5 சதவீதம் முன்னுரிமை மதிப்பெண் வழங்கப்படும். பதவிகளுக்கான முன்னுரிமை மதிப்பெண்:: பட்டதாரி ஆசிரியர் பணி: இளங்கலை மற்றும் பி.எட் மதிப்பெண்-70 சதவீதம். ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண்-20 சதவீதம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு 10 சதவீதம், ஒப்பந்த பணி அனுபவம் 5 சதவீதம் வரை. விரிவுரையாளர்: குறிப்பிட்ட பாடப்பிரிவு மதிப்பெண் 90 சதவீதம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு 10 சதவீதம், ஒப்பந்தப் பணி அனுபவம்-5 சதவீதம் வரை. பாலசேவிகா: பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் பாலசேவிகா பயிற்சி சான்றிதழ் தலா 50 சதவீதம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு 10 சதவீதம், ஒப்பந்த பணி அனுபவர் 5 சதவீதம் வரை. கணினி அறிவியல் பயிற்றுநர்: கல்வித் தகுதி மதிப்பெண்-50 சதவீதம், கிரேடு எனில் முதல் வகுப்பு 50 சதவீதம், 2ம் வகுப்பு 45 சதவீதம், 3ம் வகுப்பு 40 சதவீதம், தகுதித் தேர்வு-40 சதவீதம், வேலை வாய்ப்பு பதிவு மூப்பு 10 சதவீதம், ஒப்பந்தப் பணி அனுபவம்-5 சதவீதம் வரை. கல்வி தகுதியை முடிக்கும்போது கூடுதல் முறை தேர்வு (அரியர்) எழுதியிருந்தால், ஒவ்வொரு கூடுதல் முயற்சிக்கும் 5 சதவீதம் மதிப்பெண் கழிக்கப்படும். அனைத்து பதவிகளுக்கும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு சீனியாரிட்டி, தகுதிபெற்ற தேதியிலிருந்து (ஆசிரியர் தகுதி தேர்வு உட்பட) ஆண்டிற்கு 1 சதவீதம் என அதிகபட்சமாக 10 ஆண்டிற்கு 10 சதவீதம் மட்டுமே கணக்கிடப்படும். முந்தைய அரசாணையின் மற்ற அனைத்து நிபந்தனைகளும் எவ்வித மாற்றமின்றி தொடரும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.