கோரிமேடு மைதானத்தில் காவலர் வீர வணக்க நாள்
புதுச்சேரி: கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடந்த காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சியில், முதல்வர், உள்துறை அமைச்சர் பங்கேற்றனர்.நாடு முழுதும் பாதுகாப்பு பணியின்போது வீரத்தீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவை போற்றும் வகையில், ஆண்டு தோறும் அக். 21ம் தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் கடந்த ஆண்டு 216 பேரும், புதுச்சேரியில் 12 பேர் பணியின்போது உயிரிழந்துள்ளனர்.புதுச்சேரி போலீஸ் சார்பில் காவலர் வீர வணக்க நாள் கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர், காவலர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் துாவி வீரவணக்கம் செலுத்தினர்.அப்போது காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் நினைவாக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.அரசு கொறடா ஆறுமுகம், தலைமை செயலர் சரத்ச வுக்கான், டி.ஜி.பி., ஷாலினி சிங், அரசு செயலர் கேசவன், போலீஸ் ஐ.ஜி., அஜித்குமார்சிங்லா, டி.ஐ.ஜி. பிரிஜேந்திரகுமார் யாதவ், சீனியர் எஸ்.பி.,க்கள் மற்றும் எஸ்.பி.க்கள் கலந்து கொண்டனர்.