மருத்துவமனை ஊழியர் துாக்கிட்டு தற்கொலை
பாகூர்: பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் செழியன் 60; தனியார் மருத்துவமனை ஊழியர். இவருக்கு, மீனா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். செழியன், ரத்த அழுத்தம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, அவர் டி.பி., மற்றும் கல்லீரல் நோயாலும் பாதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவருக்கு உடல் நிலை சரியில்லாததால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்நிலையில், செழியன், மாட்டு கொட்டகையில், புடவையால் துாக்கிட்டு கொண்டார். குடும்பத்தினர், அவரை மீட்டு, பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.