புதுச்சேரி:தேர்தல் கூட்டணி தொடர்பாக தன்னை சந்திக்க வந்த பா.ஜ., தேசிய செயல் தலைவர் நிதின் நபினிடம், புதுச்சேரியின் கள நிலவரத்தை முதல்வர் ரங்கசாமி புட்டு புட்டு வைத்ததோடு, ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு நடந்து வருகிறது. இரட்டை இன்ஜின் ஆட்சி என, வர்ணிக்கப்பட்ட இந்த ஆட்சியில் ஒரு இன்ஜினாக உள்ள பா.ஜ., மீது கடந்த ஓராண்டாகவே முதல்வர் ரங்கசாமி கடும் அதிருப்தியில் உள்ளார். இதனால், வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வை கழற்றிவிட்டு என்.ஆர்.காங்., தனியாக போட்டியிடலாம் என, கூறப்பட்ட நிலையில் பா.ஜ., மேலிட தலைவர்கள் அவ்வப்போது முதல்வர் ரங்கசாமியை சந்தித்து சமாதானப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இரண்டு நாள் சுற்றுப் பயணமாக நேற்று முன்தினம் புதுச்சேரி வந்த பா.ஜ.,வின் புதிய தேசிய செயல் தலைவர் நிதின் நபின், கூட்டணி சம்பந்தமாக நேற்று முதல்வர் ரங்கசாமியை திலாஸ்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி அரசியல் சூழல், தேர்தல் வியூகங்கள் குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. தொடருனும்..... சந்திப்பின்போது, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், வரும் சட்டசபை தேர்தலிலும் என்.ஆர்.காங்., - பா.ஜ., வெற்றிக் கூட்டணி தொடர வேண்டும். மீண்டும் நாம் ஆட்சியை பிடிக்க வேண்டும். 'பெஸ்ட் புதுச்சேரி'யை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இதனை தான் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உறுதிப்பட என்னிடம் தெரிவித்தனர் என்று அழுத்தமாக தெரிவித்தார். பொங்கிய முதல்வர் அதை கேட்ட முதல்வர் ரங்கசாமி, நாங்கள் இன்னும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். பிரதமர் மோடி மீதும், உள்துறை அமைச்சர் அமித்ஷா மீதும் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. இதில் எந்த சந்தேகமும் யாருக்கும் வேண்டாம். வரும் சட்டசபை தேர்தலிலும் என்.ஆர்.காங்., - பா.ஜ., வெற்றி பெற வேண்டும். ஆனால் கள நிலவரம் வேறாக உள்ளது. 30 சட்டசபை தொகுதிகளிலும் புதுச்சேரியில் கிறிஸ்துவர், முஸ்லீம்கள் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர். சிறுபான்மையினருக்கு நமது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. என்.ஆர்.காங்., மீதும், என் மீதும் சிறுபான்மையினர் நம்பிக்கை வைத்துள்ளனர். பா.ஜ.,வை விட்டு வெளியே வாருங்கள். நீங்கள் தனியாக நில்லுங்கள். நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம். எங்களின் ஓட்டு உங்களுக்கு தான் என்று சிறுபான்மையினர் அடித்து சொல்கின்றனர். கூட்டணியில் உள்ள பா.ஜ., விற்கு சிறுபான்மையினர் ஓட்டு போட மறுக்கின்றனர். இது தான் யதர்த்தமான கள நிலவரம். இது ஒருபக்கம் இருந்தாலும், ஆட்சியின் கடைசி காலமாக இருப்பதால், எஞ்சியுள்ள நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய செய்து, தேர்தலை சந்தித்துவிடலாம் என்றால் நிர்வாகத்தில் கவர்னர், அதிகாரிகளால் ஏகப்பட்ட தடங்கள்; முட்டு கட்டை கள் போடுகின்றனர். எங்களுக்காக சட்டத்தை வளைத்து கேட்கவில்லை. மக்களை சந்திப்பதற்கான மக்களுக்கான - மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை விரைந்து முடிக்க கேட்கிறோம். கவர்னரிடம் பேசுகிறோம் என நிர்மல் குமார் சுரானா கூறினார். ஆனால் எதுவும் மாறவில்லை. எதுவும் நடக்கவில்லை. இன்னும் தடங்கள் - முட்டு கட்டைகள் அதிகரித்து தான் வருகிறது. இந்த நிர்வாக தர்மசங்கடம் ஒருபக்கம் இருக்க, உங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஆட்சிக்கு எதிராகவே பேசி வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் உங்கள் எம்.எல்.ஏ.,க்கள் நம்முடைய ஆட்சிக்கு எதிராகவே பேசியது எவ்வளவு தெரியுமா.. இதுவும் மக்களிடம் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளது. மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படியே போனால் எப்படி... மக்களை சந்திப்பது ரொம்ப கஷ்டம். இது தான் யார்த்தமான முழு களநிலவரம். இது மார்கழி மாதம்; தை பிறக்கட்டும். தை பிறந்தால் வழி பிறக்கும். கூட்டணி சம்பந்தமாக முழுவதுமாக பேசி முடிவு செய்வோம் என்று முழு ஆதங்கத்தையும் ஒரேயடியாக கொட்டி தீர்த்தார். சமதானம் இதனை கேட்ட பா.ஜ., வின் தேசிய செயல் தலைவர் நிதின் நபின், முதல்வர் ரங்கசாமியை சமாதானப்படுத்தினார். அங்கிருந்த புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியாவை அழைத்து கவர்னருடன் பேசி அனைத்தையும் சரி செய்ய கூறினார். அப்போது, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நான் இனி புதுச்சேரிக்கு அடிக்கடி வரப்போகிறேன். வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரியில் தான் இருப்பேன். எதுவாக இருந்தாலும் நேரடியாக நானே முன்னின்று முடித்து வைக்கிறேன். உங்களிடம் நானே 'ஒன் டு ஒன்'னாக பேசுகிறேன். நீங்கள் சொன்னதை போன்று தை மாதத்தில் வழி பிறக்கும் என்று முதல்வர் ரங்கசாமியிடம் நம்பிக்கை வெளிப்படுத்தினார். இச்சந்திப்பின்போது, மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., மாநிலத்தலைவர் ராமலிங்கம் உடனிருந்தனர்.