ஓட்டல், விடுதி கண்காணிப்பை உறுதிபடுத்த அறிவுறுத்தல்
புதுச்சேரி: குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஓட்டல், விடுதி மற்றும் பார்களின் கண்காணிப்பை உறுதிபடுத்த உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. குடியரசு தின விழாவை முன்னிட்டு, உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பயிற்சி ஐ.பி.எஸ்., அதிகாரி கதிரவன், ஓட்டல், விடுதி மற்றும் பார் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், ஓட்டல், விடுதி மற்றும் பார் உரிமையாளர்களிடம் சி.சி.டி.வி., கேமராக்கள் சரியாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். கேமராக்கள் சாலையை நோக்கி இருக்க வேண்டும். விடுதிகளில் தங்கும் நபர்களிடம் அடையாள சான்றுகளான பான் கார்டு, ஆதார், ஓட்டுநர் உரிமம் மற்றும் மொபைல் போன் எண் போன்றவற்றை சரிபார்க்க வேண்டும். வெளிநாட்டினர் வந்தால் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்த பின்னரே அனுமதிக்க வேண்டும். ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என, அறிவுறுத்தப்பட்டது.