உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளையாட்டு இட ஒதுக்கீட்டிற்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு : குரூப்-சி அரசு பணியிடங்களுக்கு சிக்கல் தீர்ந்தது

விளையாட்டு இட ஒதுக்கீட்டிற்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு : குரூப்-சி அரசு பணியிடங்களுக்கு சிக்கல் தீர்ந்தது

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் குரூப்-சி அரசு பதவிகளில் விளையாட்டு வீரர்களுக்கு 5 சதவீதம்இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.புதுச்சேரி அரசின் குரூப்-சி அரசு பணியிடங்களில் 5 சதவீதம் விளையாட்டு வீரர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அரசின் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால் பல குழப்பங்கள் நிலவியது.இது தொடர்பாக உயர்மட்ட கமிட்டி தலைவரான தலைமை செயலர் சரத் சவுன்கான் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து, அனைத்து துறை செயலர்களுடன் கலந்து ஆலோசித்து புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

எண்ணிக்கை உயர்வு

புதுச்சேரியில் 40 வகை யான விளையாட் டுகள் அடையாளம் காணப்பட்டு கடந்த 2018ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் கூடுதலாக 25 விளையாட்டு கள் உயர் கல்வி சேர்க்கைக்கு சேர்க்கப்பட்டன. அதே 65 விளையாட்டுகளில் சாதிப்பவர்களும் குரூப்-சி அரசு பணியிடங்களில் விண்ணப்பிக்க தகுதியை பெறுகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதனை புள்ளிகள்

சர்வதேச, தேசிய, மாநில விளையாட்டு போட்டிகளில் சாதிக்கும் வீரர்கள் புதுச்சேரியின் குரூப்-சி, வேலைக்கு விண்ணப்பிக்கும் விதத்தில், 15 வகையான விளையாட்டு போட்டிகள் அங்கீகரிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்பட உள்ளது.தங்கம், வெள்ளி, வெண்கள், பங்கேற்பு என வீரர்கள் பெறும் பதக்கங்களுக்குகேற்ப ஒவ்வொரு பிரிவிலும் புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.குருப்-சி பணிக்கு விண்ணப்பிக்கும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் ஒரே புள்ளிகளைப் பெற்றால், இரண்டாவது சிறந்த சாதனை பரிசீலிக்கப்படும். இரண்டாவது சிறந்த சாதனையின் அடிப்படையில் பெறப்பட்ட புள்ளிகளும் ஒரே மாதிரியாக இருந்தால், அடுத்த சிறந்த சாதனை மற்றும் ஆட்சேர்ப்பு அறிவிப்பு தேதி வரை பரிசீலிக்கப்படும். இந்த அளவுகோளுக்கு பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களின் ரேங்க்கள் ஒரே மாதிரியாக இருந்தால், முந்தைய நிதியாண்டிலும் சிறந்த சாதனை படைத்த விளையாட்டு வீரருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

புதிய நிபந்தனைகள்

ஒரு ஆண்டில் பட்டியலிடப்பட்ட விளையாட்டு துறைகளில் ஒரு வருடாந்தரப் போட்டியில் மட்டுமே விளையாட்டு வீரர் பெற்ற உயர்ந்த சாதனை புள்ளிகள் வழங்குவதற்கு பரிசீலிக்கப்படும்.தகுதிச் சான்றிதழுக்கான சர்வதேச போட்டியாக கருதப்படும் போட்டியில் குறைந்தபட்சம் 6 நாடுகளின் பங்கேற்பு இருக்க வேண்டும். தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் முந்தைய சாதனைகளுடன் மட்டுமே, சர்வதேச போட்டிகளில் சாதனைகள் பங்கேற்பு பரிசீலிக்கப்படும். எந்தவொரு சர்வதேச அல்லது தேசிய போட்டிகளிலும் நேரடி பங்கேற்பு, செலக் ஷன் ட்டிரையல், முகாம்கள் புள்ளிகள் வழங்குவதற்கு பரிசீலிக்கப்படாது என அறிவிக்கப்பட் டுள்ளது.குரூப்-சி விளையாட்டு இட ஒதுக்கீட்டிற்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. அரசு துறைகளும் குழப்பத்தில் இருந்தன. பல வழக்குகளும் கோர்ட்டிற்கு சென்றன. புதிய வழிகாட்டுதல்கள் மூலம் நீண்ட காலமாக குரூப்- சி, அரசு பணியிடங்களில் நிலவி வந்த குழப்பங்கள், சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ளது.

எத்தனை புள்ளிகள்

தேசிய விளையாட்டுகள், பெடரேஷன் கப் போட்டிகளில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு 270 புள்ளிகள், வெள்ளிக்கு-255, வெண்கலத்திற்கு-240, பங்கேற்பிற்கு 50 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கேலோ இந்தியா பேட்டியில் தங்க பதக்கம் வென்றால் 180 புள்ளிகள், வெள்ளி-165, வெண்கல பதக்கம்-150, பங்கேற்பிற்கு-30 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ