வேலை வாய்ப்பு முகாம் இன்று துவங்குகிறது
புதுச்சேரி: திறன் மேம்பாட்டு பயிற்சி வேலை வாய்ப்பு முகாம் இன்று துவங்குகிறது. புதுச்சேரி அரசின் பிப்டிக் நிறுவனம் மற்றும் மாபோய் அறக்கட்டளை இணைந்து, திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாமை லாஸ்பேட்டை பெண்கள் பொறியியல் கல்லுாரியில் நடத்துகின்றன. முகாம் இன்று துவங்கி நாளை 21ம் தேதி வரை இரண்டு நாள் காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது. முகாமினை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினர்களாக முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப செயலர் முகம்மது அஹ்சன் அபித், தொழில்துறை செயலர் விக்ரநாத் ராஜா, பள்ளி கல்வி இயக்குனர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். முகாமில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக்., பி.எஸ்.சி., ஓட்டல் நிர்வாகம், இதர பட்டயப் படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களில் இருந்து பங்கேற்று, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.