வட்ட அளவிலான கால்பந்து போட்டி கம்பன் அரசு பள்ளி முதலிடம்
புதுச்சேரி : மூன்றாம் வட்ட பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில், முதல் இரண்டு இடங்களை அரசு பள்ளி அணிகள் பிடித்துள்ளன.புதுச்சேரி கல்வித்துறை சார்பில், மூன்றாம் வட்ட பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை, வட்டம் மூன்றின் விளையாட்டு குழு தலைவர் சேலியமேடு கவிஞர் வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் சுப்ரமணியம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோர் என, இரண்டு பிரிவுகளில் நடந்த போட்டியில், 30க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். இதில், இரண்டு பிரிவுகளிலும், கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடமும், கரையாம்புத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாம் இடமும், கரியமாணிக்கம் ஹோலிபிளவர் மேனிலைபள்ளி மூன்றாம் இடமும் பிடித்தன.