ரூ.100 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
புதுச்சேரி: கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து, நாடு முழுதும் 100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி, கோவையை சேர்ந்த தொழிலதிபர் சையது உஸ்மானை, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் அசோகன், 70; பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரை கடந்த 2023ம் ஆண்டு தொடர்பு கொண்ட மர்ம நபர், 'கிரிப்டோ கரன்சி'யில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி 'ஆஷ்பே' இணையதள பக்கத்தில் ரூ. 98 லட்சம் முதலீடு செய்து, ஏமாந்தார்.சைபர் கிரைம் போலீசில் அசோகன் அளித்த புகாரின் பேரில், சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, எஸ்.பி., பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கோயம்புத்துாரை தலைமையிடமாக கொண்டு நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பிரபலங்கள் மூலம் கடந்த 2021ல் 'ஆஷ்பே' (ட்ரோன் கனெக்ட்) நிறுவனம் துவக்கப்பட்டது. பின், மாமல்லபுரம் சொகுசு ஓட்டலில் நடந்த விழாவில், ஆஷ்பேவில் முதலீடு செய்த 100 நபர்களுக்கு ரூ. 10 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள கார்களை முதலீடுகளுக்கு ஏற்ப பரிசாக வழங்கினர். மும்பை கப்பல் ஒன்றில் மிகப்பெரிய விழா நடத்தி, அதில் ஆயிரக்கணக்கான மக்களை பங்கேற்க செய்து, ஆஷ்பேவில் முதலீடு செய்யுமாறு நிதி திரட்டியுள்ளனர். இதில் புதுச்சேரியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் ரூ. 3.6 கோடி வரை இழந்ததும், நாடு முழுதும் 100 கோடிக்கு மேல் மோசடி நடத்திருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக, கோயம்புத்துாரை சேர்ந்த நித்தீஷ்குமார் ஜெயின், 36; அரவிந்த்குமார், 40; 'ஆஷ்பே' இணையதளத்தை உருவாக்கிய தாமோதரன், 52; ஆகியோரை, இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் கார், 3 மொபைல் போன், ஒரு லேப்டாப், 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.இவ்வழக்கில் மூளையாக செயல்பட்ட கோயம்புத்துாரைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான அலுமினிய பொருட்கள் தயாரிப்பு நிறுவன இயக்குனர் பாபு (எ) சையது உஸ்மான், 51; என்பவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.இவ்வழக்கில், இம்ரான் பாஷா, நுார்முகமது, சந்தானம், இம்ரான்பாஷா, நிந்தியப்பன், கணேசன், ஆலியா, ரேஷ்மா பர்வீன், அன்சர், லுக்மான் உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ரூ. 70 கோடி இழந்த மக்கள்
சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா கூறியதாவது:கிரிப்டோ கரன்சி உட்பட, ஆன்லைனில் எந்த ஒரு முதலீடும் செய்ய வேண்டாம். வெளிநாடு வேலை வாய்ப்பு போன்றவற்றை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம். கடந்த ஓராண்டில் மட்டும் புதுச்சேரி மக்கள் 70 கோடி ரூபாய்க்கு மேல் சைபர் மோசடியில் இழந்துள்ளனர். கோயம்புத்துாரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் கிடைக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.