எலுமிச்சை நறுமண மிளகு செடி: சபாநாயகர் செல்வம் அறிமுகம்
விவசாய இளம் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமி உருவாக்கியுள்ள எலுமிச்சை நறுமண மிளகு செடி அறிமுகப்படுத்தப்பட்டது.புதுச்சேரி, கூடப்பாக்கத்தை சேர்ந்த வெங்கடபதி, ஆராய்ச்சியின் மூலம், கனகாம்பரம் பூவில் பல நுாறு வகையான செடிகளை உருவாக்கி, சாதனை படைத்தவர். இந்திய அரசு, இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.இவரது மகள் ஸ்ரீலட்சுமி. 32; எம்.பி.ஏ., பட்டதாரி. ஸ்ரீலட்சுமி, தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.ஆரஞ்சு, சாக்லெட், நாவல், பன்னீர் சுவை கொண்ட கொய்யா செடிகளை உருவாக்கினார். ஆரஞ்சு கொய்யா செடியை பிரதமர் மோடி பெயரிலும், சாக்லெட் கொய்யா செடியை, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி பெயரிலும் அறிமுகப்படுத்தினார். அவர் தற்போது எலுமிச்சை நறுமணத்தில் மிளகு செடி உருவாக்கியுள்ளார்.அந்த மிளகு செடியில் கிடைத்த மிளகும் எலுமிச்சை நறுமணத்தில் உள்ளது. இதனை நேற்று சட்டசபை சபாநாயகர் செல்வம் வெளியிட்டார்.நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ வெங்கடபதி, வேளாண் துறை இயக்குநர் வசந்தகுமார், மிளகு செடியை உருவாக்கிய விவசாய இளம் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமி கலந்து கொண்டனர்.