காலி பாட்டில்களுக்கு காசு அமைச்சர் ஜான்குமார் யோசனை
புதுச்சேரி: மழை நீரை சேமிக்கும் எண்ணம் மக்களுக்கு குறைந்து விட்டது என, அமைச்சர் ஜான்குமார் தெரிவித்தார். அவர், கூறியதாவது: எனது அலுவலகத்திற்கு வெளியே உள்ள வாய்க்கால் சுத்தம் செய்வதற்கு 95 ஆயிரம் செலவாகியது. ஆனால் அரசு 5.5 லட்சத்திற்கு கான்ட்ராக்ட் விட்டுள்ளது. காலதாமதம் ஆனதால் நாங்களே சுத்தம் செய்தோம். அந்த 5.5 லட்சத்தில் 95 ஆயிரமாவது கொடுங்கள் என்று கேட்டோம். ஆனால் கொடுக்கவில்லை. இது என்னுடைய சொந்த பணத்தில் செய்துள்ளேன். கால்வாய்களில் தலையணை, பாய், குப்பைகள், குளிர்பான பாட்டில்களை பொதுமக்கள் வீசி செல்கின்றனர். கால்வாய் சுத்தமாக இருந்தால் மக்கள் அதில் குப்பைகளை வீச அச்சப்படுவர். 30 ஆண்டுகளுக்கு முன், பீர் பாட்டில்களுக்கு 30 பைசா கொடுத்ததால் மக்கள் அதை எடுத்துச் சென்று கடையில் போட்டனர். இன்றைக்கு ஒரு பாட்டிலுக்கு 5 ரூபாய் என்றால் ஒரு பாட்டிலை விடுவார்களா. அனைத்து பாட்டில்களையும் மக்கள் கீழே போடாமல் கடையில் போடுவார்கள். மினரல் வாட்டர் பாட்டில்களை திருப்பி கொடுத்தால் பணம் தருவார்கள் என்றால் மக்கள் வீதியில் வீச மாட்டார்கள். இது தான் என்னுடைய ஐடியா... மழை நீரை சேமிக்கும் எண்ணம் மக்களுக்கு குறைந்து விட்டது. தண்ணீரைப் பற்றி நான் சொல்லும் போதெல்லாம் முதல்வர் கேட்டுவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார். ஆனால் அதே தண்ணீரைப் பற்றி மத்திய அமைச்சர் நிதின்கட்கரி சொல்லும் போது உட்கார்ந்து ஆர்வமாக கைதட்டுகின்றனர் முதல்வர் ரங்கசாமியும், அமைச்சர் லட்சுமிநாராயணனும். புதுச்சேரி மக்களுக்கு நல்ல நீரை அதுவும் சுத்திகரித்த நீரை கொடுக்க வேண்டும்' என்றார்.