சீட்டு நடத்துபவர்களிடம் வைப்பு தொகை சம்பத் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
புதுச்சேரி:தனிநபர் சீட்டு நடத்துபவர்கள் அரசிடம் வைப்புத் தொகை வைக்க வேண்டும்.மீறுபவர்கள் மீது பணம் மோசடி வழக்கு பதிய வேண்டும் என சம்பத் எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.பூஜ்ய நேரத்தில் சம்பத் எம்.எல்.ஏ., பேசியதாவது:புதுச்சேரியில் பல தனி நபர்கள் தீபாவளி சீட்டு உள்ளிட்ட பல வகையான சீட்டுகள் பிடித்து வருகின்றனர். இவர்களிடம் பொதுமக்கள் ஏராளமானவர் சேர்ந்து பணம் செலுத்துகின்றனர். சீட்டு பிடிப்பவருக்கு ஏதேனும் பொருளாதார சரிவு ஏற்படும் போது அவரிடம் சீட்டு பணம் செலுத்தியவர்கள் பணம் திரும்ப கிடைப்பது பெரும் சவாலாக உள்ளது. இதனால் பாதிக்கப்படும் பலர் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவற்றை தடுக்க சீட்டு பிடிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசிடம் வைப்புத் தொகையாக வைக்க வேண்டும் அரசின் அனுமதி பெற்று சீட்டு நடத்த வேண்டும். அப்படி அனுமதி பெறாமல் சீட்டு நடத்துபவர்கள் மீது பணம் மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதனால் பொதுமக்களில் பணம் பாதுகாப்பாக இருக்கும் பாதிக்கப்படுவதும் குறையும்.