அரசு உதவி பெறும் பள்ளிகள் விவகாரத்தில் போராட்டம் எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிவிப்பு
புதுச்சேரி: அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்காவிட்டால் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என, எதிர்க்கட்சித் தலைவர் சிவா அறிவித்துள்ளார். அவரது அறிக்கை; புதுச்சேரியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகள் தள்ளாட்டத்தில் இருக்கின்றன. ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. ஐந்து மாத சம்பளத்தை நிலுவையில் வைத்து, அவர்களை பட்டினிப் போட்டு, பாடம் நடத்த சொன்னால் எந்த அளவிற்கு அது திருப்தியாக இருக்கும். புதுச்சேரியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது சம்பளம் கொடுப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது. ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முறையாக வழங்கிய நிலையில் ஏன் உதவி பெறும் ஆசிரியர்கள் மட்டும் வழங்கவில்லை. சம்பளம், ஓய்வூதியம் இவைகளை 5 சதவீதம் பள்ளி நிர்வாகம் செலுத்த வேண்டுமென்ற கண்டிப்பால் ஓய்வூதியர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அவலங்களை களைய வேண்டும். மாதம்தோறும் ஊதியத்தை உடனடியாக உறுதி செய்ய வேண்டும். மாத கணக்கிலான தாமதத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை பாய வேண்டும். இல்லையெனில், 35 அரசு உதவிபெறும் பள்ளிகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும்' என, கூறப்பட்டுள்ளது.