சீனியர் எஸ்.பி., தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி
புதுச்சேரி: புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., ராகவ் தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு , சப்இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதில், 5 பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய சைபர் கிரைம் தொடர்பான புகார்களை தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் அளித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க இன்ஸ்பெக்டருக்கு, சீனியர் எஸ்.பி., ராகவ் உத்தரவிட்டார். தொடர்ந்து, சீனியர் எஸ்.பி., பேசுகையில், 'பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றம்செய்யும் முன் அத்தகைய வலைத்தளங்களின் பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த வேண்டும். பெண்கள் தங்களின் நெருங்கிய நண்பர்களுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும்.வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்குகிறோம் என்று ஆசை வார்த்தைகள் கூறினால் அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்துள்ளதாக கூறி வாட்ஸ் ஆப் மூலமாக ஏதேனும் லிங்க் மற்றும் ஆப் மெசேஜ் வந்தால் அதனை கிளிக் செய்ய வேண்டாம். ஆப் மூலம் உடனடி கடன் மற்றும் குறைந்த வட்டியில் லோன் தருவதாக கூறிஉங்கள் புகைபடங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டினால் அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். இதுபோன்று சைபர் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் யுக்திகளில் இருந்து ஏமாறாமல் இருப்பது சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், சைபர் கிரைம் தொடர்பான புகார் மற்றும் சந்தேகங்களுக்கு 1930 மற்றும் 0413-2276144, 9489205246 மற்றும் மின்னஞ்சல்: cybercell-py.gov.inதொடர்பு கொள்ளலாம் என, தெரிவித்தார்.