அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு
புதுச்சேரி: ஊழல் வழக்குளில் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகளின் தண்டனையை துரிதப்படுத்த இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் தலைமையில் நிர்வாகிகள் டி.ஐ.ஜி., யிடம் மனு வழங்கினர். மனுவில், புதுச்சேரி பத்திர பதிவாளர், செட்டில்மெண்ட் அதிகாரி, நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குநர், வில்லியனுார், உழவர்கரை உதவி பதிவாளர்கள் ஆகியோர் காமாட்சியம்மன் கோவில் நில அபகரிப்பு வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஆளும்கட்சியின் அழுத்தம் காரணமாக சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கிடப்பில் உள்ளது. இதேபோல், காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்ததற்காக காரைக்கால் துணை கலெக்டர், சாரம் உதவி பதிவாளர், பொதுப்பணித் துறை முதன்மை பொறியாளர், தரமற்ற மருந்துகள் வாங்கியதில் சுகாதார துறை ஓய்வு பெற்ற இயக்குநர்கள், பணியில் உள்ள சில அதிகாரிகள் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டனர். போலி மருந்து விற்பனை மோசடியினை சி.பி.சி.ஐ.டி., கண்டுபிடித்துள்ளது. இதில் பாரபட்சமின்றி அனைவரும் மீதும் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன், தினேஷ் பொன்னையா உடனிருந்தனர்.