உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தை மினி பீச் ஆக மாற்ற திட்டம் 1.5 கி.மீ., துாரத்திற்கு வாக்கிங் ட்ராக்கிற்கு வெளிச்சம்

லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தை மினி பீச் ஆக மாற்ற திட்டம் 1.5 கி.மீ., துாரத்திற்கு வாக்கிங் ட்ராக்கிற்கு வெளிச்சம்

புதுச்சேரி : புது பொலிவு பெற துவங்கியுள்ள லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் கடற்கரை மணல் கொட்டி 'மினி பீச்' ஆக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் காலை மற்றும் மாலையில் 'வாக்கிங்' செல்கின்றனர். நுாற்றுக்கணக்கான மாணவர்கள் 'ஸ்கேட்டிங்' பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ெஹலிபேடு மைதானம் வெளிச்சம் இல்லாமல் இருளில் மூழ்கி, பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. இதையடுத்து ெஹலிபேடு மைதானத்தில், ஐந்து இடங்களில் பொதுப்பணித்துறை மூலம் ைஹமாஸ் விளக்கு போடப்பட்டன. இந்த ைஹமாஸ் விளக்குகளுக்கு தற்போது மின் இணைப்பு கொடுத்து ஜொலிக்கின்றன. பொதுமக்கள் நிம்மதியாக 'வாக்கிங்' செல்கின்றனர். இருள் நீங்கிய ெஹலிபேடு மைதானத்தை தற்போது 'மினி பீச்' ஆக மாற்றும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் குறித்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கூறியதாவது:எனது காலாப்பட்டு தொகுதியில் உள்ள ெஹலிபேடு மைதானத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் 'வாக்கிங்' செல்கின்றனர். ஆனால் போதிய வெளிச்சம் இல்லாமல் இருண்டு, பாதுகாப்பின்றி இருந்தது. அதையடுத்து, பொதுப்பணித் துறை மூலம் 5 இடங்களில் ைஹமாஸ் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த ெஹலிபேடு மைதானத்தை 'மினி பீச்' ஆக மாற்ற திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் 'வாக்கிங்' செல்லும் மைதானம் கட்டாந்தரையாக உள்ளது. அதனால், ெஹலிபேடு மைதானத்தில் கடற்கரை மணலை கொட்டி 'மினி பீச்' ஆக மாற்ற முடிவு செய்துள்ளோம்.இதற்காக, தேய்காய்திட்டு துறைமுகத்தை துார் வாரியபோது கிடைத்த கடற்கரை மணலை ெஹலிபேடு மைதானத்தில் கொட்டி 'பீச்' ஆக மாற்ற முடிவு செய்துள்ளோம். இதற்கான அனுமதி கிடைத்ததும் விரைவில் பணிகள் துவங்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.10 லட்சம் வரை செலவாகும்.ெஹலிபேடு மைதானத்தில் 'வாக்கிங்' செல்வோர் குறிப்பாக முதியோர்கள் சற்று ஆற அமர ஓய்வெடுக்க போதிய கட்டமைப்பு இல்லை. அதனால், மைதானத்தை சுற்றிலும் ஒவ்வொரு 500 அடி தொலைவிற்கும் டபுள் கருங்கல் பெஞ்ச் என ரூ.6 லட்சம் செலவில் 40 பெஞ்ச் அமைக்கப்பட உள்ளது.அதேபோல் 'வாக்கிங்' செல்லும் சாலையை சுற்றிலும் போதிய வெளிச்சம் இல்லை. தெருவிளக்குகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக மட்டுமே உள்ளன. அதனால், 20 அடி துாரத்திற்கு ஒன்று என ரூ.30 லட்சம் மதிப்பில் 60 தெருவிளக்குகள் ஒன்றரை கி.மீ., தொலைவிற்கு அமைக்கப்பட உள்ளது.இதனால், ஏர்போர்ட் சாலை, என்.சி.சி., வளாகம், தாகூர் கல்லுாரி வழியாக 'வாக்கிங்' செல்வோர் பாதுகாப்பாக செல்ல முடியும். இதேபோல் ஏர்போர்ட் ரோடு, நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி, உழவர்கரை சந்தை மீண்டும் ெஹலிபேடு மைதானம் வழியாக 'வாக்கிங்' செல்ல 120 தெரு விளக்குகள் 3 கி.மீ., தொலைவிற்கு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது நீண்ட துாரம் 'வாக்கிங்' செல்வோர்களுக்கு வசதியாக இருக்கும்.இது தவிர லாஸ்பேட்டை உட்புற தார் சாலைகளில் தனியாக 'வாக்கிங் ட்ராக்' இரும்பு கம்பிகளுடன் அமைக்கும் திட்டமும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே ெஹலிபேடு மைதானத்தில் 'வாக்கிங்' செல்வதற்கு ஏற்ப ரூ.90 லட்சம் செலவில் சாலை போட்டு, மார்க் செய்யப்பட்டுள்ளது.மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்திட, மைதானத்தை சுற்றிலும் 6 இடங்களில் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட உள்ளது. சென்சாருடன் கூடிய இந்த கேமிராக்கள் வாங்கிங் செல்வோர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.மைதானத்தில் தற்போது 'ரோலர் ஸ்கேட்டிங்' வசதி மட்டுமே உள்ளது. இதன் பக்கத்தில் ரூ.6 கோடி செலவில் 'சின்தட்டிக் ரோலர் ஸ்கேட்டிங்' மைதானம் சர்வதேச தரத்தில் அமைக்க திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தாகூர் அரசு கல்லுாரியில் கட்டாந்தரையாக உள்ள மைதானத்தில் ரூ.9 கோடி செலவில் கால்பந்து மைதானமாக மாற்றவும் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.இத்திட்டங்கள் அனைத்தும் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும்போது ெஹலிபேடு மைதானம் 'மினி பீச்'ஆக மட்டுமின்றி, அனைத்து வசதிகளும் ஒருங்கிணைந்த சிறந்த மைதானமாகவும் திகழும் என்றார்.

'ஜோரா கைதட்டுங்க'

மக்கள் பிரதிநிதிகள், அரசின் பல்வேறு துறை அதிகாரிகளின் கைகோர்ப்பினால், ெஹலிபேடு மைாதனம் புதுப்பொலி பெற்று வருகிறது.ெஹலிபேடு மைதானத்தை, தரமான சிறந்த மைதானமாக மாற்ற முயற்சித்து வரும் தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், மைதானத்திற்கு வெளிச்சம் கிடைக்க தொடர்ந்து அதிகாரிகளை வலியுறுத்திய லாஸ்பேட்டை எம்.எல்.ஏ., வைத்தியநாதன், மைதானத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்த இடத்தின் உரிமையாளர் கல்வித்துறை, நிதி ஒதுக்கி ைஹமாஸ் விளக்குகள் போட்ட பொதுப்பணித்துறை, அதற்கு மின் இணைப்பு கொடுத்த மின் துறை, மைதானத்தின் துாய்மை பராமரிக்கும் உழவர்கரை நகராட்சிக்கு பாராட்டுகள்.

உறுதியான நடவடிக்கை தேவை

ெஹலிபேடு மைதானம், கடந்த பெஞ்சல் புயலில் இழந்த பசுமையை மீட்டெடுக்க 'தினமலர்' நாளிதழ் விதைத்துள்ளது.இதில், ஏராளமான கல்வி நிறுவனங்கள் கைகோர்த்து மைதானத்தை சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றன. இதனால் பசுமைக்கான சூழலும் துளிர்விட துவங்கியுள்ளது. இந்த ஒட்டுமொத்த முயற்சியையும் மைதானத்தில் சுற்றி திரியும் கால்நடைகள் நாசமாக்கி வருகின்றன. கால்நடைகளை உழவர்கரை நகராட்சி பிடித்தாலும், அவைகள் மீண்டும், மீண்டும் மைதானத்திலேயே சுற்றி திரிகின்றன.உழவர்கரை நகராட்சியின் எச்சரிக்கையை, கால்நடைகளின் உரிமையாளர்கள் பொருட்படுத்துவதே இல்லை. கால்நடைகளை திரிய விடும் உரிமையாளர்கள் மீது நகராட்சி நிர்வாகம் குற்றவியல் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ெஹலிபேடு மைதானம் மீண்டும் பசுமையாகும்.

டி.ஜி.பி., உத்தரவிடுவாரா?

நல்ல நிலையில் இருக்கும் ெஹலிபேடு மைதானத்தை அலங்கோலமாக்கும் வகையில் தற்போது சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர். பொழுது சாய்ந்ததும் குடிமகன்கள், சமூக விரோதிகள் அனைத்து சாலைகளிலும் மதுபாட்டிலுடன் வந்து அமர்ந்து விடுகின்றனர். ஆற அமர உட்கார்ந்து மணிக்கணக்கில் குடித்துவிட்டு, கொண்டு வந்த பாட்டில், உணவு பொருட்களின் எச்சங்களை அப்படியே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் மைதானம் சுற்றிலும் மீண்டும் குப்பைமேடாக அலங்கோலமாக காட்சியளிக்கின்றது. மைதானம் முழுவதும் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், கேரிபேக்குகள், ஐஸ்கிரீம் கப்புகள், கேக் அட்டை பெட்டிகள், டீ கப்புகள், ஹான்ஸ், சிகரெட் உள்ளிட்ட போதை பாக்கெட்கள் முகம் சுளிக்கும் வகையில் சிதறி கிடக்கின்றன.ஆனால் லாஸ்பேட்டை போலீசார் சமூக விரோதிகளை விரட்டியடிப்பதில்லை. ெஹலிபேடு மைதானத்தில் தினமும் இரவு ரோந்தை தீவிரப்படுத்த டி.ஜி.பி., உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை