மாணவர் தற்கொலை போலீசார் விசாரணை
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கத்தில் 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் கணிதம் பாடம் சரியாக எழுதாத மாணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கரியமாணிக்கம் ஜே.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சந்தோஷ், 15; வில்லியனுாரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். தற்போது சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், சந்தோஷ் கணித தேர்வு சரியாக எழுதவில்லை என்று பெற்றோரிடம் வருத்தப்பட்டுள்ளார். இதற்கு பெற்றோர் ஆறுதல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் காலை பெற்றோர் இருவரும் பணிக்கு சென்று மாலை வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் இருந்த சந்தோஷ் அவரது அறையில் உள்ள மின்விசிறியில் துாக்கில் தொங்கினார். அவரை மீட்டு, நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். செல்வராஜ் புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.