திருக்காமீஸ்வரர் கோவிலில் மண்டபம் கட்ட ஆலோசனை
வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் ஆறாம் திருவிழா மண்டபம் கட்டுமான பணிக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி 14 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒரு சமூகம் சார்பில் வெகு விமர்சையாக நடக்கும். 6ம் நாள் வன்னியர்குல மரபினர் சார்பில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அவ்விழாவில், மாட வீதியில் வில்லியனுார் - பத்துக்கண்ணு சாலை முகப்பில் உள்ள மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வைப்பது வழக்கம். பழமையான இம்மண்டபம் தற்போது இடித்து அப்புறபடுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்தில் புதிய மடம் அமைக்கும் பணிக்கு திருக்காமீஸ்வரர் கோவில் வளாகத்தில் சிறப்பு ஆலோ சனை கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில், வன்னியர் மண்டப தனி அதிகாரி ராமதாஸ் வரவேற்றார். வன்னியர் சங்க தலைவர் மதியழகன், ஊர் முக்கியஸ்தர்கள் சத்தியமூர்த்தி, பிரேம், விஜயகுமார், முரளிதரன், பிரபு, சம்பத், பழனிசாமி உள்ளிட்டோர் மண்டபம் நவீன வசதிகளுடன் கட்டுவது குறித்து ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் வில்லியனுார் கொம்யூனுக்கு உட்பட்ட 26 கிராம பஞ்சாயத்துக்களை சேர்ந்த கிராம முக்கியஸ்தர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.