உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி இணைப்பு கல்லுாரிகளுக்கு....  எச்சரிக்கை!பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு

புதுச்சேரி இணைப்பு கல்லுாரிகளுக்கு....  எச்சரிக்கை!பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக இணைப்பு கல்லுாரிகளில் தகுதியான பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக் கழக நிர்வாகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த விதிகளை மீறும் கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழக ஆய்வுக்குழுக்கள் அண்மையில் இணைப்பு கல்லுாரிகளில் நடத்திய ஆய்வில், பல கல்லுாரிகளில் தகுதியான முதல்வர், பேராசிரியர்கள், நுாலகர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை என்பது கண்டறியப்பட்டது. இது மாணவர்களின் கல்வித் தரத்தைப் பாதிப்பதாக பல்கலைக்கழகம் அந்தந்த கல்லுாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, தனது கவலையை வெளிப்படுத்தி இருந்தது. தவறுகளை திருத்தி கொள்ள போதிய வாய்ப்பும், அவகாசம் அளித்தது. ஆனாலும், இணைப்பு கல்லுாரிகள் பல்கலைக்கழகத்தின் அறிவுறுத்தலை ஏற்று தகுதி வாய்ந்த பேராசிரியர்களை நியமிக்கவில்லை. அதையடுத்து பொறுத்து பார்த்த புதுச்சேரி பல்கலை நிர்வாகம் பொங்கி எழுந்து, அனைத்து இணைப்பு கல்லுாரிகளுக்கும் எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:: பல்கலை பிரதிநிதி கட்டாயம்:: பேராசிரியர்கள் மற்றும் முதல்வர் நியமனத்தின் போது பல்கலையால் நியமிக்கப்படும் பிரதிநிதி கண்டிப்பாகத் தேர்வுக் குழுவில் இருக்க வேண்டும். அவர் இல்லாமல் செய்யப்படும் எந்த ஒரு பணி நியமனத்தையும் பல்கலைக்கழகம் அங்கீகரிக்காது. தகுதி வரம்பு:: யூ.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., என்.சி.டி.இ., போன்ற தேசிய அளவிலான கல்வி அமைப்புகளின் விதிகளின்படி, கலை மற்றும் அறிவியல் துறைப் பேராசிரியர்களுக்கு பி.எச்டி., அல்லது நெட் தகுதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காலக்கெடு:: புதிய கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்னதாகவே மே அல்லது ஜூன் மாதங்களில் காலியிடங்களை நிரப்ப வேண்டும். இடையில் ஏற்படும் காலியிடங்களை டிசம்பர் அல்லது ஜனவரிக்குள் நிரப்ப வேண்டும். சம்பளம் மற்றும் படிகள்:: இணைப்பு பேராசிரியர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதிய விகிதங்களின்படி, முழுமையான சம்பளம் வழங்க வேண்டும். ஊதியக் குறைபாடுகள் இருந்தால் அத்தகு கல்லுாரிகளின் தரவரிசை மற்றும் அங்கீகாரம் பாதிக்கப்படும். கடும் எச்சரிக்கை இணைப்பு கல்லுாரிகள் பணியாளர் தேர்வின் போது அறிவிப்பு வெளியிட்ட நாளிதழ் நகல், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தேர்வுக் குழுவின் அறிக்கையை பல்கலையில் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். குறிப்பு தேர்வுக் குழுவின் கூட்ட அறிக்க, பல்கலை பிரதிநிதியின் கையொப்பம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் சான்றிதழ் நகல்கள் பிளஸ் 2 முதல் பி.எச்டி., வரை சரி பார்ப்பிற்காக பல்கலையில் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நியமனத்திற்காக நியமிக்கப்படும் பல்கலை பிரதிநிதி, அந்த ஒரு முறைக்கு மட்டுமே செல்லுபடியாவார். அவரை மற்ற நியமனங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. இந்த விதிகளை பின்பற்றி, பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை இணைப்பு கல்லுாரிகள் நிரப்பி கொள்ள வேண்டும். விதிகளைப் பின்பற்றாத கல்லுாரிகளுக்கு பல்கலை இணைப்பு மற்றும் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என, எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை