புதுச்சேரி அரசின் 2022ம் ஆண்டிற்கான சிறந்த படமாக குரங்கு பெடல் தேர்வு
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் 2022ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக, 'குரங்கு பெடல்' தேர்வு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்பட கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் சார்பில், 'இந்திய திரைப்பட விழா 2023' வரும் 4ம் தேதி துவங்கி 8ம் தேதி வரை நடக்கிறது. சுய்ப்ரேன் வீதியில் உள்ள அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கில், வரும் 4ம் தேதி மாலை 6:00 மணிக்கு துவக்க விழா நடக்கிறது. முதல்வர் ரங்கசாமி விழாவை துவங்கி வைக்கிறார். விழாவில், கடந்த 2022ம் ஆண்டிற்கான புதுச்சேரி அரசின் சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட குரங்கு பெடல் திரைப்படத்திற்கு, சங்கரதாஸ் சுவாமிகள் விருதினை முதல்வர் வழங்குகிறார்.விருதை திரைப்படத்தின் இயக்குநர் கமலகண்ணன் பெற்று கொள்கிறார். அதைத் தொடர்ந்து, குரங்கு பெடல் திரைப்படம் திரையிடப்படுகிறது. தினமும் மாலை 6:00 மணிக்கு, ஒரு பிராந்திய மொழிப்படம், அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கில் திரையிடப்படுகிறது. 5ம் தேதி, ஆர்ஆர்ஆர் (தெலுங்கு), 6ம் தேதி அரியிப்பு (மலையாளம்), 7ம் தேதி டோனிக் (வங்காளம்), 8ம் தேதி மேஜர் (இந்தி) திரையிடப்படுகிறது. இந்த திரைப்படங்களை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.