உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அந்த நாள் ஞாபகம் வந்ததே... புதுச்சேரியை கதிகலக்கிய எம்டன் கப்பல்

அந்த நாள் ஞாபகம் வந்ததே... புதுச்சேரியை கதிகலக்கிய எம்டன் கப்பல்

முதலாம் உலகப்போர் 1914ம் ஆண்டு முதல் 1918 வரை நடந்தது. இதில் பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும், மைய நாடுகளான ஆஸ்திரேலியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் இடையே மோதியது.அப்போது, இந்தியா ஆங்கிலேயர் வசம் இருந்ததால், உலகப்போரின் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. அப்போது, ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய நிறுவனத்தை மதரசாப்பட்டினம் என்று அழைக்கப்பட்ட சென்னையில் ஆரம்பித்து இருந்தனர்.இதனால், ஜெர்மனியின் பார்வை சென்னை மீது திரும்பியது. அவர்கள், 'எஸ்.எம்.எஸ். எம்டன்' என்ற நவீன போர்க்கப்பலில் 1914ம் ஆண்டு செப்டம்பரில் சென்னை வந்தது. கடலில் 2 கடல் மைல் தொலைவில் 'எம்டன்' கப்பல் நிலைநிறுத்தினர். இதையறிந்த ஆங்கிலேயர்கள், சென்னை முழுவதும் மின்சாரத்தை துண்டித்தனர். ஆனாலும், இரவோடு இரவாக சென்னை மீது, பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர்.இதில் சென்னை துறைமுகத்திலிருந்த எண்ணெய் கிடங்குகள் வெடித்து சிதறியது. உயர்நீதிமன்ற சுற்றுச்சுவர் இடிந்தது. மற்றொரு குண்டு வெடிக்காமல் ஐகோர்ட்டு வளாகத்திலேயே கிடந்தது.சென்னையில் தாக்குதலை முடித்துக்கொண்டு, புதுச்சேரி வழியாக துாத்துகுடி நோக்கி போர்க்கப்பல் திரும்பியது. சென்னையில் குண்டு வீசிய எம்டன் கப்பல் புதுச்சேரியிலும் குண்டு போட போடுகிறது என்ற தகவல் கசிந்து புதுச்சேரி முழுவதும் காட்டுத் தீயாக பரவியது.இதனால், புதுச்சேரியில் உச்சக்கட்ட பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அச்சமடைந்த மக்கள் குடும்பத்துடன் வீட்டை விட்டு கூட்டமாக நடந்தும், மாட்டு வண்டிகளிலும் ஊரைவிட்டு வெளியேறினர். இதனால் புதுச்சேரியில் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.புதுச்சேரி வாசிகள், மேற்கு பகுதியில் 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள கிராமங்களில் தஞ்சமடைந்தனர். ஆனால், எம்டன் கப்பல் புதுச்சேரியை தாண்டி சென்றுவிட்டதாக கிடைத்த தகவலால் மக்கள் நிம்மதியடைந்தனர். அதனை தொடர்ந்து, படிப்படியாக மீண்டும் புதுச்சேரி நகர வாசிகள் வீடு திரும்பியதாக வரலாறு கூறுகிறது.'எம்டன்' கப்பலால் புதுச்சேரிக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை என்றாலும், அதன் தாக்கம் இன்று வரையில் மறையவில்லை. இதனால் தான் இன்றைக்கும் திடகாத்திரமாக இருக்கும் ஒருவரை பார்த்தால் எம்டன் மாதிரி இருக்கிறான் பாரு என்ற சொல்வதையும் புதுச்சேரியில் பரவலாக புழக்கத்தில் உள்ளது.

சமத்துவத்திற்கு வழிவகுத்த 'எம்டன்'

'எம்டன்' கப்பல் வரவு குறித்து பாவேந்தர் பாரதிதாசன், 12.01.1931 ல், 'ஜாதி ஆபத்து-எம்டன் கப்பல் வரவு' என்ற தலைப்பில் நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். அதில், கூனிச்சம்பட்டு கிராமத்தார் தம்மை நாடி வந்தவர்கள் அனைவரும் மொத்தத்தில் பட்டணவாசிகள் என்று கருதினார்களே தவிர, அவர்களின் ஜாதியை பார்க்கவில்லை. அங்கே தங்கியவர்களும் தங்களுக்கு இடம் கொடுத்தவர்களின் ஜாதியை அலசி பார்த்து தத்தமக்கு ஏற்ற ஜாதிக்காரர் வீட்டில் தங்கவில்லை. எனவே கூனிச்சம்பட்டில் புதுச்சேரிவாசிகள் தங்கியிருந்தவரைக்கும் அங்கு சமத்துவு வாழ்வு வாழ்ந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி