சமுதாய கூடம் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
புதுச்சேரி : சுப்பையா நகர் சமுதாய நலக்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரக் கோரி, அ.தி.மு.க., தட்டாஞ்சாவடி தொகுதி செயலாளர் கமல்தாஸ், உழவர்கரை நகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி, தட்டாஞ்சாவடி தொகுதி சுப்பையா நகரில் 10 ஆண்டுகளுக்கு முன், உழவர்கரை நகராட்சி மூலம் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு, திறப்பு விழா செய்யப்பட்டது. ஆனால், இதுவரையில் சமுதாய நலக்கூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. அரசின் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல், பழுந்தடைந்து வருகிறது. ஆகையால், பழுதடைந்து வரும் சமுதாய நலக்கூடத்தை சீரமைத்து, உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, அங்கன்வாடியாகவோ, ரேஷன் கடையாகவோ பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.