சென்டாக் மாணவர் சேர்க்கையை விரைந்து முடிக்க வேண்டும்: செந்தில்குமார் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
பாகூர்: விளையாட்டு பிரிவு தொடர்பான அரசாணையை நிறுத்தி வைத்து, சென்டாக் சேர்க்கையை விரைந்து முடிக்க வேண்டும் என செந்தில்குமார் எம்.எல்.ஏ., வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; புதுச்சேரியில் 2026-27ம் கல்வியாண்டிற்கான சென்டாக் மாணனர் சேர்க்கையை, தாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும். அவசரமாக பிறப்பிக்கப்பட்ட விளையாட்டு பிரிவு அரசாணை மீது கோர்ட் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, சர்ச்சைக்குரிய புதிய அரசாணையின் படி கலந்தாய்வு நடத்தப்பட்டால், பின் நாட்களில் கோர்ட் உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில், இந்த கலந்தாய்வு முழுமையாக ரத்தாகும் சூழல் ஏற்படும். இதனால், 98 சதவீதம் பொதுப்பிரிவு, நீட், தொழில்முறை படிப்புகளுக்கான மாணவர்களின் சேர்க்கை மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் நிலை ஏற்படலாம். மாணவர்கள் நலன்கருதி இந்த ஒரு ஆண்டிற்கு மட்டும் சர்ச்சைக்குரிய அரசாணையை அரசு நிறுத்தி வைக்க வேண்டும். பழைய 65 விளையாட்டுப் பிரிவுகளின் படியே சேர்க்கை நடத்தப்பட்டால், வழக்குகள் உடனடியாக முடிவுக்கு வந்து சேர்க்கை எந்தத் தடங்கலுமின்றி விரைவாக நடக்கும். 98 சதவீத பொதுப்பிரிவு மாணவர்களின் சேர்க்கை தாமதமாகக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எனவே, கவர்னர், முதலமைச்சர் இந்த ஆண்டிற்கு அரசாணையை நிறுத்தி வைத்து, அனைத்து மாணவர்களின் உயர் கல்வியையும் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.