மாணவர்கள்,இளைஞர் அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் தள்ளு முள்ளு
புதுச்சேரி, : சிறுமிமரணத்திற்கு நீதி கேட்டு மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் நடத்திய முற்றுகையில், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், பரபரப்பு நிலவியது.புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு, புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளின் கூட்டமைப்பினர் நேற்று காலை அண்ணா சாலையில் திரண்டனர்.அங்கிருந்து நேரு வீதி வழியாக சட்டசபை நோக்கி பேரணியாக சென்றனர்.தி.மு.க. மாணவர் அணி மணிமாறன், இளைஞர் காங்., ஆனந்தபாபு, இளைஞர் பெருமன்றம் எழிலன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஆனந்த் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.மிஷன் வீதி வழியாக வந்த பேரணியை செயின்ட் ழான் வீதி ஆம்பூர் சாலை சந்திப்பு அருகே போலீசார் பேரிகார்டு அமைத்து தடுத்தனர். தடுப்புகளை மீறி செல்ல முற்பட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.சிலர் பேரிகார்டுகளை தாண்டி குதித்தனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக துாக்கி, வெளியேற்றினர். இதனால் பரபரப்பு நிலவியது.சிறுமியின் கொலைக்கு பொறுப்பேற்று முதல்வர், உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.