| ADDED : பிப் 21, 2026 05:15 AM
புதுச்சேரி: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஆசிரியர் கைது செய்ததை கண்டித்து, தனியார் பள்ளி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் இ.சி.ஆரில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்ததால், மக்கள் அவதிக்குள்ளாகினர். புதுச்சேரி, காலாப்பட்டை சேர்ந்தவர் சப்தன்,34; தனியார் பள்ளி ஆசிரியர். இவருக்கும், அதேப் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் முன்விரோதம் காரணமாக சில தினங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது. அதில், சப்தன் ஜாதி பெயரை கூறி திட்டியதாக அப்பெண், காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் சப்தன், ஜாதி பெயரை கூறி திட்டயது உறுதியானதால், வழக்கை பி.சி.ஆர்., பிரிவுக்கு மாற்றினர். அதனை த் தொடர்ந்து கோர்ட் உத்தரவின் பேரில் பி.சி.ஆர்., பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மாலை சப்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனைக் கண்டித்து சப்தனின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், அன்று இரவு காலாப்பட்டு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர். இந்நிலையில், சப்தன் வேலை செய்த பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10:30 மணிக்கு காலாப்பட்டு போலீஸ் ஸ்டேஷன் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், இ.சி.ஆரில் போக்குவரத்து தடைப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காலாப்பட்டு இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட மாணவர்களை, கலெக்டரை சந்திக்க அழைத்து சென்றனர். பிற மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில், போலீசார் அழைத்து சென்ற மாணவர்களை சந்தித்த கலெக்டர் குலோத்துங்கன், மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். மாணவர்கள் சாலை மறியல் காரணமாக காலாப்பட்டு இ.சி.ஆரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.