மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் காட்சிப் பொருளாக உள்ள சிக்னல்
திருபுவனை: மதகடிப்பட்டு மேம்பாலம் நான்குமுனை சந்திப்பில் போக்குரவத்து நெரிசலை தடுக்க புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிக்னல் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக காட்சிப் பொருளாக உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. அலுவலக நாட்களில் காலை, மாலையில் நேரங்களில் அதிகளவு போக்குவரத்து நெரிசலை தினம் சந்திக்க வேண்டி இருப்பதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியுற்று வருவது தொடர்கதையாக உள்ளது.இந்த நிலையில் மதகடிப்பட்டில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடந்த ஆகஸ்ட்டு மாதம் நான்குமுனை சந்திப்பில் புதிதாக சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டு, மின் இணைப்புகள் உள்ளிட்ட பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது.ஆனாலும் 4 மாதங்கள் கடந்தும் சிக்னல் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே தொடரும் போக்குரவத்து நெரிசலை கட்டுப்படுத்த, தயார் நிலையில் உள்ள சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டுவர புதுச்சேரி அரசும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.