| ADDED : ஜன 18, 2024 03:50 AM
புதுச்சேரி: கதிர்காமத்தில் வாலிபர் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற மூவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி திலாஸ்பேட்டை, வீம நகர், கருணா ஜோதி வீதியைச் சேர்ந்தவர் தமிழரசன்,24; பெயிண்டர். இவருக்கும் திலாஸ்பேட்டை வினோத்,19; என்பவருக்கும் கடந்த 4 ஆண்டிற்கு முன் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் உள்ளது.தமிழரசன் நேற்று முன்தினம் இரவு வழுதாவூர் சாலை, கதிர்காமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வீட்டில் இருந்து புறப்பட்டார். அப்போது, அங்கு நின்றிருந்த வினோத், தமிழரசனை கூப்பிட்டார். தமிழரசன் பைக்கை நிறுத்தாமல் சென்றார்.உடன் வினோத் அவரது கூட்டாளிகள் திலாஸ்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக், 19; ஆகாஷ், 19; விஜய், 19; ஆகியோர் ஒரே பைக்கில் விரட்டி சென்று தமிழரசனை மடக்கி, நாங்கள் கூப்பிட்டால் நிற்க மாட்டியா எனக் கேட்டு, மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டு, கத்தியை வெளியே எடுத்து, இரவுக்குள் வெடிகுண்டு வீசி கொலை செய்வோம் என, மிரட்டினர்.அதிர்ச்சியடைந்த தமிழரசன் அங்கிருந்து தப்பி சென்று, கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து வினோத், கார்த்திக், ஆகாஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களில் கார்த்திக் தவறி விழுந்ததில் வலது காலில் காயம் ஏற்பட்டது. விஜய் தப்பியோடிவிட்டார்.கைது செய்யப்பட்ட மூவரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.