மேலும் செய்திகள்
பசுமையாக்கல் திட்டம்; 1.64 மரக்கன்று நடவு
07-Feb-2026
வில்லியனுார்: புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் சார்பில், பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி பசுமை இயக்கம், கோவில் காடுகளை வளர்க்கும் திட்டத்தின் கீழ் 300 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவில் நிலத்தில் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் சிவா, மாசுக்கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ், கோவில் நிர்வாகிகள் குலசேகரன், வெங்கடேஸ்வரன் ஆகியோர் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இதில், நாகலிங்கம், நாவல், கடம்பம், உசிலை, ராம் சீதா, வில்வம், தசத்தால வில்வம், வேங்கை மற்றும் கல் அத்தி போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் நடப்பட்ட அனைத்து மரங்களும் 'ஜியோ டேக்' முறையில் பதிவு செய்யப்பட்டு, அவற்றின் வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. ஏற்பாடுகளை மாசுக்கட்டுப்பாட்டு குழு திட்ட அலுவலர்கள் இளங்கோ, சாந்தலட்சுமி மற்றும் ஸ்ரீநிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.
07-Feb-2026