காரைக்கால் அரசலாற்றில் குளித்த இரு வாலிபர்கள் நீரில் மூழ்கி பலி
காரைக்கால்: காரைக்கால் அரசலாற்றில் குளித்த இரு வாலிபர்கள் நீரில் மூழ்கி இறந்தனர். காரைக்கால் ஒப்பிலாமணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் மகன் நித்திஷ், 23; இன்ஜினியரான இவர் நெய்வேலியில் வேலை செய்து வந்தார். காரைக்கால் கீரை தோட்டத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் மகன் அருள்ராஜ், 23; எலக்ட்ரீஷியன். நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் மாலை ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தங்களது நண்பர்கள் 9 பேருடன் காரைக்கால் அத்திப்படுகை கிராமத்தில் உள்ள அரசலாற்றில் குளித்தனர். ஆற்றில் திடீரென நீரோட்டம் அதிகரித்ததில், நித்திஷ் மற்றும் அருள்ராஜ் இருவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். தகவலறிந்த காரைக்கால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் நிரவி போலீசார், இரவு வரை தேடியும் இருவரையும் மீட்க முடியவில்லை. இந்நிலையில், இருவரின் உடல் நேற்று காலை கரை ஒதுங்கியது. நிரவி போலீசார், உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். ஆடிப்பெருக்கு விழாவில் இரு வாலிபர்கள் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.