நெய்தல் மக்கள் இயக்கம் ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி; நெய்தல் மக்கள் இயக்கம் சார்பில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மீனவர் ஒருவருக்கு நியமன எம்.எல்.ஏ., வழங்க வேண்டுமென தீர்மானம் நிறைப்பட்டுள்ளது. புதுச்சேரி நெய்தல் மக்கள் இயக்கம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தலைவர் பெரியாண்டி தலைமையில் நடந்தது. இதில், நிர்வாகிகள் அன்பழகன், ஜெயந்தி, மூர்த்தி உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராம பஞ்சாயத்தார் மற்றும் இயக்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், புதுச்சேரி சட்டசபைக்கு புதிதாக மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ., நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்கள் கடந்த 75 ஆண்டுகளாக சிறுபான்மையினராக உள்ளதால், எந்த கட்சியும் தேர்தலில் சீட்டு கொடுப்பதில்லை. இதனால், தொடர்ந்து மீனவர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் கோரிக்கைகளை சட்டசபையில் எழுப்ப வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. எனவே, வரும் தேர்தலை கருத்தில் கொண்டு, தற்போது நடக்க விருக்கும் நியமன எம்.எல்.ஏ., தேர்வில், மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பா.ஜ., சேர்ந்த மீனவர் ஒருவருக்கு நியமன எம்.எல்.ஏ., பதவி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.