காலையில் வைத்த வரவேற்பு பேனர்: கவர்னர் உத்தரவால் மாலையில் அகற்றம்
புதுச்சேரி: பேனர் தடை சட்டத்தை மீறி கான்பெட் நிறுவனம் சென்டர் மீடியனில் காலையில் வைத்த வரவேற்பு பேனர்கள், கவர்னரின் அதிரடி உத்தரவால் மாலையில் அகற்றப்பட்டது.புதுச்சேரியில் பேனர் வைக்க தடை சட்டம் இருந்தும் அரசியல் பிரமுகர்கள் அதனை மதிப்பது கிடையாது. தடையை மீறி சாலை முழுதும் பேனர் கட்டி வந்தனர். பேனர் விஷயத்தில் கொரட்டை விட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என நீதிமன்றம் எச்சரித்த பிறகே, அரசியல் கட்சியினர், பேனர் விவகாரத்தை அடக்கி வாசிக்க துவங்கினர். இந்நிலையில், பேனர் வைப்பதில், அரசியல் கட்சியினருக்கு நாங்கள் சற்றும் சலைத்தவர்கள் அல்ல என்பதுபோல், அரசு கூட்டுறவு நிறுவனமான கான்ெபட் நிறுவனம் நிரூபித்துள்ளது.தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகத்தில் நேற்று இரவு கான்பெட் நிறுவனம் சார்பில் தீபாவளி பட்டாசு கடை திறக்கப்பட்டது.இவ்விழாவிற்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமியை வரவேற்று நேற்று காலை இ.சி.ஆர்., சென்டர் மீடியன்களில் வரிசையாக வரவேற்பு பேனர்கள் வைத்தனர். பொதுமக்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய அரசு கூட்டுறவு நிறுவனம், கவர்னர், முதல்வரை குஷிப்படுத்த தடையை மீறி பேனர் வைத்ததை பார்த்த பொதுமக்கள், சென்டர் மீடியனில் வரவேற்பு பேனர் வைத்தால் தான் கவர்னர், முதல்வர் விழாவிற்கு வருவார்களா அல்லது அவர்களுக்கு வழி தெரியாதா? என கேள்வி எழுப்பினர்.பொதுமக்களின் புலம்பல், கவர்னரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்து, சென்டர் மீடியன்களில் கட்டப்பட்டிருந்த பேனர்கள் நேற்று மாலை ௩:00 அளவில் அதிரடியாக அகற்றப்பட்டது.இனிவரும் காலங்களில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க அரசு அதிகாரிகளை கவர்னர் எச்சரிக்க வேண்டும்.