5 கி.மீ., தொலைவிற்கு சட்ட விரோத பேனர்கள்; வேடிக்கை பார்த்த அதிகாரிகள் மீது அதிருப்தி கோர்ட் அவமதிப்பு வழக்கு பாயுமா?
புதுச்சேரி : புதுச்சேரியில் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு 5 கி.மீ., தொலைவிற்கு சட்ட விரோத பேனர்கள் வைக்கப்பட்டது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரியில் சட்ட விரோத பேனர்கள் வைக்க தடை உள்ளது. ஆனால் காது குத்து, கல்யாணம், மஞ்சள் நீராட்டு கோஷ்டிகள் அனைத்து பகுதிகளிலும் மீண்டும் சட்ட விரோத பேனர் கலாசாரத்தினை துவக்கியுள்ளனர்.உச்சக்கட்டமாக நேற்று ராஜிவ் சிக்னல் முதல் அரியாங்குப்பம் வரை 5 கி.மீ.,தொலைவிற்கு கண்ட மேனிக்கு விதிமுறைகளை மீறி மஞ்சள் நீராட்டு விழாவிற்காக பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இவை அனைத்துமே சட்ட விரோத பேனர்கள். முதல்வர் துவங்கி, அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், எம்.எல்.ஏ.,க்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் வரவேற்று போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் தாறுமாறாக பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது மக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இவர்கள், சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தையும், சாலையோரம் உள்ள மின்கம்பங்கள், மரங்களையும் விட்டு வைக்காமல் பேனர்களை கட்டி வைத்து இருந்தனர்.பொதுப்பணித் துறை ஒப்பந்தக்காரர் மஞ்சள் நீராட்டு விழா என்பதால் இந்த சட்ட விரோத பேனர்களை பொதுப்பணி துறையும், உள்ளூர் போலீசாரும் சுத்தமாக கண்டுக்கொள்ளவில்லை.பேனர்கள் அச்சடிக்கும்போது, அதை பிரிண்ட் செய்யும், பிரிண்ட்டிங் கடைகளின் பெயர்கள் இடம் பெறுவதே இல்லை. அதன் கீழ்ப்பகுதியில் பேனர் அனுமதி அளிக்கப்பட்ட நாள், அனுமதி எண், அனுமதி அளிக்கப்பட்ட அளவின் விவரம் மற்றும் அனுமதி வழங்கப்பட்ட கால அவகாசம், பேனர் தயார் செய்த கடையின் பெயர் கட்டாயம் இடம் பெற வேண்டும்.ஆனால், மஞ்சள் நீராட்டு கோஷ்டிகள் வைத்த பேனர்களில் இப்படி ஒன்று கூட இல்லை. இந்த பேனர்களை வைத்தவர்கள், அச்சடித்து கொடுத்த பிரிண்டிங் கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சட்ட விரோத பேனர்களை அச்சடித்து கொடுக்க கூடாது என மாவட்ட கலெக்டர், நகராட்சிகள் பல முறை கூட்டம் போட்டு அழைத்து அறிவுரை சொல்லியாகிவிட்டது. ஆனால் பிரிண்டிங் கடைகள் அரசின் உத்தரவினை எதையும் பொருட்படுத்தவில்லை. புதுச்சேரியில் வைக்கப்படும் சட்ட விரோத பேனர்கள் தடுக்க முடியாமல் கலெக்டர் துவங்கி, போலீசார் வரை சுத்தமாக தோல்வியடைந்துவிட்டனர்.போலீசாரும் அரசியல் வாதிகள், அதிகார வர்க்கத்தினர், துட்டு இருப்பவர்கள் பேனர்கள் வைத்தால் கண்ணை மூடிக்கொள்ளுகின்றனர். பேனர்களில் கொட்டை கொட்டையாக பெயர், படம் போட்டு சட்ட விரோத பேனர்கள் அச்சடித்து வைக்கப்படுகின்றன. ஆனால் போலீசாரே பேனர்கள் வைத்தவர்கள் ஒப்புக்குகென ஒரு வழக்கு போடுகின்றனர்.பேனர்கள் தடுப்பு விஷயத்தில் பொதுப்பணித் அதிகாரிகள், போலீசார் மீது மக்கள் ஒட்டுமொத்தமாக நம்பிக்கை இழந்துவிட்டனர். இதற்கு மேல் நீதிமன்றம் நேரடியாக தலையிட்டாமல் மட்டுமே புதுச்சேரியில் பேனர் கலாசாரத்தை ஒழிக்க முடியும். பேனர் வைத்தவர்கள், பேனரை அகற்றாமல் கடமை தவறிய அதிகாரிகள் மீது கோர்ட் தானாகவே முன் வந்து கோர்ட் அவமதிப்பு வழக்கினை தொடர வேண்டும்.அப்படியே சட்ட விரோத பேனர்களை தொடர்ந்து அச்சடித்து கொடுக்கும் பிரிண்டிங் கடைகளுக்கு நீதிமன்றமே சீல் வைத்து முடக்கும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.