உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான பஸ் நிறுத்தங்கள்.. மாற்றப்படுமா? . அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்க வேண்டும்

 போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான பஸ் நிறுத்தங்கள்.. மாற்றப்படுமா? . அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்க வேண்டும்

புதுச்சேரி, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை மற்றும் இந்திரா சதுக்கம் கடலுார் மார்க்க பஸ் நிறுத்தங்களை மாற்றி அமைப்பதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலா நகரமான புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பெருகி வருகின்ற வாகனப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பிற்கு ஏற்ப, சாலைகளை விரிவாக்கம் செய்யாத காரணத்தால், தினமும் போக்குவரத்து நெரிசலில் நகரம் திண்டாடி வருகிறது. பஸ் நிறுத்தத்தால் தொல்லை நுாறு அடி சாலை, கோரிமேடு சாலை போன்றவை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளா கும். இந்த சாலை வழியாக தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் புதுச்சேரியை கடந்து செல்கின்றன. புதுச்சேரியில் தினசரி பயணிக்கும் 80 சதவீத வாகனங்கள் இந்திரா மற்றும் ராஜிவ் சதுக்கங்களை கடந்தே தமிழக பகுதிக்கு சென்று வருகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலைகளில் சகட்டுமேனிக்கு அமைக்கப்பட்டுள்ள பஸ் நிறுத்தங்களில் பஸ்களை தாறுமாறாக நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர். இதனால், பின்னால் வரும் வாகனங்கள் முந்தி செல்ல முடியாமல், பஸ்சின் பின்னால் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இந்திரா சிக்னல் அருகே... குறிப்பாக, பஸ் நிலையத்தில் இருந்து கடலுார் நோக்கி செல்லும் வாகனங்கள் இந்திரா சதுக்கத்தில் இடதுபுறம் திரும்பியதும், 10 அடி துாரத்தில் அமைந்துள்ள பஸ் நிறுத்தத்தால் பெரும் அவதியை சந்திக்க நேரிடுகிறது. மேலும், நுாறு அடி சாலை வழியாக வருகின்ற வாகனங்களும், வில்லியனுார் சாலையில் வருகின்ற வாகனங்களும் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. சிக்னலுக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த பஸ் நிறுத்தத்தில் வரிசையாக பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபடுகிறது. பஸ்சை முந்தி செல்ல முடியாமல் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன. அதற்குள், சென்னை மார்க்கத்தில் 'கிரீன்' சிக்னல் விழுந்து விடுவதால், அங்கிருந்து வரும் வாகனங்களும் கடலுார் மார்க்கமாக செல்ல முடியாமல், ரவுண்டானாவிலேயே ஸ்தம்பித்து நிற்கின்றன. இதற்கிடையில், விழுப்புரம் மார்க்க சிக்னல் விழுந்து விடுவதால், ரவுண்டானா சிக்கி சின்னாபின்னமாவது தினசரி வாடிக்கையாகி விட்டது. தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை இதேபோல, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையின் நுழைவு வாயிலுக்கு மிக அருகாமையிலேயே பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. கோரிமேடு மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர். குறிப்பாக, தொழிற்பேட்டை நுழைவு வாயிலுக்கு நேராக பஸ்களை நிறுத்து விடுகின்றனர். இதனால், எதிர் திசையில் இருந்து யூ டர்ன் போட்டு தொழிற்பேட்டைக்கு செல்ல வேண்டியவர்களும், தொழிற்பேட்டையில் இருந்து வெளியே வருபவர்களும் சாலையை கடந்து செல்ல முடியாமல் அவதி அடைகின்றனர். இதனால், திண்டிவனம் சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நிற்பதுடன் விபத்துகளும் நடக்கின்றன. பஸ் நிறுத்தங்கள் மாற்றப்படுமா? தினசரி அரங்கேறும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான இந்திரா சதுக்கத்தில் கடலுார் மார்க்கத்தில் உள்ள சிக்னலை 100 மீட்டர் தள்ளி, காமாட்சி ஓட்டலுக்கு எதிரில் மாற்றினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. அதுபோல, திண்டிவனம் சாலையில் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை நுழைவு வாயில் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தையும் 100 மீட்டர் தள்ளி அமைத்தால் பாதி பிரச்னை தீர்ந்து விடும்.

'பார்க்கிங் ப்ரி சோன்'

அறிவிக்கப்படுமா?

புதுச்சேரி - கடலுார் சாலையில் ரயில்வே மேம்பால பணி நடைபெறுவதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டு, இந்திரா சதுக்கம் வழியாக பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால், இந்த பகுதியில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், இந்திரா சதுக்கத்தில் கடலுார் மார்க்க சாலை வளைவு குறுகலாக உள்ளதால், பஸ்கள் வளைவது சிரமமாக இருக்கிறது. அதனை தவிர்க்க அந்த வளைவு பகுதியை அகலப்படுத்த வேண்டும். மேலும், இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்துவதை போலீசார் தடை, 'பார்க்கிங் ப்ரி சோன்' பகுதியாக அறிவிக்க வேண்டும்.

ரவுண்டானா விவகாரம்

கவர்னர் கவனிப்பாரா?

இந்திரா சிலையை சுற்றி 22.86 மீட்டர் சுற்றளவிலும், ராஜிவ் சிலையை சுற்றி 19.14 மீட்டர் சுற்றளவிலும் ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரவுண்டானாக்களின் சுற்றளவு பிரமாண்டமாக உள்ளதால், சிக்னல் விழுந்ததும் வாகனங்கள் வேகமாக கடந்து செல்ல முடியாமல், மெதுவாக செல்கின்றன. அதற்குள் மறுபுற சிக்னல் விழுந்து விடுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இவ்விரு ரவுண்டானாக்களின் சுற்றளவை குறைக்க வேண்டும். இதுதொடர்பாக பலமுறை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இந் த விவகாரத்தில் கவர்னர் கைலாஷ்நாதன் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு ரவுண்டானாக்களின் சுற்றளவை குறைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை