உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி பிச்சாவரத்தில் அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?

புதுச்சேரி பிச்சாவரத்தில் அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?

மாங்குரோவ் காடுகளில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளுக்குகேற்ப அடிப்படை வசதிகளை அரசு மேம்படுத்த வேண்டும். சிதம்பரம் பிச்சாவரம் அலையாத்தி காடுகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு புதுச்சேரியில் மாங்குரோவ் காடுகள் வளர்ந்துள்ளன. இருபுறமும் அடர்ந்து வளர்ந்துள்ள அலையாத்தி காடுகள் வழியாக ரம்மியமாக படகு பயணம் செய்வது மறக்க முடியாத தனி அனுபவமாக உள்ளது. இந்த அனுபவத்திற்கா க, சுற்றுலா பயணிகள் புதுச்சேரியின் மாங்குரோவ் காடுகள் வழியாக படகுகளில் பயணம் செய்ய குவிந்து வருகின்றனர். உப்பளம் துறைமுக வளாகத்தில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் புறப்படும் பைபர் படகுகள் துறைமுகம், மாங்குரோவ் காடுகள், அரிக்கன்மேடு, மீண்டும் முகத்துவாரம், உப்பளம் துறைமுகம் வந்தடைகிறது. இந்த ஒன்னரை மணி நேரம் படகு பயணத்திற்கு 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என்ற ஏக்கம் எதிரொலித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் போட்டில் ஏற ஒரு ஜெட்டி மட்டுமே உள்ளது. அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இது போதுமனதாக இல்லை. அப்புறம் தாகம் தணிக்க இலவச குடிநீர் கூட இல்லை. கழிவறையும் போதுமான எண்ணிக்கையில் இல்லை. பெரிய விசைப்படகில் அவர்களே சிறிய கழிப்பறை வைத்துள்ளனர். சிறிய விசைப்படகுகள் உள்ள இடத்தில் இது கூட இல்லை. அடுத்து உணவுக்கான ஓட்டல்களும் இல்லை. இதனால் படகு பயணத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, பெண்கள் ஓய்வறைகளை தேடி அலைகின்றனர். புதர்களில் இயற்கை உபாதைக்கு ஒதுங்குகின்றனர். இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட போட்கள் இயங்குகிறது. போட்டிற்கு மாதம் 8 ஆயிரம் ரூபாய் என, செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை. மாங்குரோவ் காடுகள் வழியாக பயணம் மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர். இச்சூழ்நிலையில், உப்பளம் துறைமுகத்தில் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு வசதிகளும் மேம்படுத்த வேண்டும்.

சுற்றுலா பயணிகளை ஈர்க்கலாம்

'மாங்குரோவ் காடுகள் வழியாக பயணம் மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால், பிச்சாவரத்தினை காட்டிலும் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும். மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க முடியும்' என்றார். -முனியன், எக்ஸ்போ வாட்டர் ஸ்போர்ட்ஸ் அண்டு அட்வன்ட்ஜரஸ் அசோசியேஷன் தலைவர்

அனுமதி கிடைக்கல...

சுற்றுலா பயணிகளுக்கு நாங்களே கழிவறை ஏற்படுத்த நினைத்தாலும் அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த அனுமதியை தந்தால் கூட, சுற்றுலா பயணிகளுக்கான கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி விடலாம். -சதீஷ், துணை தலைவர்.

முகத்துவாரத்தை கவனிக்கனும்

மாங்குரோவ் காடுகள் வழியாக பயணம் மேற்கொள்ளும் படகுகளுக்கு முகத்துவாரம் அடிக்கடி துார்ந்துபோவது பெரிய பிரச்னையாக உள்ளது. எங்கு இருக்கும் குப்பைகளும் இங்கு வந்து சேர்ந்து, குப்பை மேடாக மாறிவிடுகிறது. இதனை சீரான இடைவெளியில் அகற்றினால் படகு பயணம் தடைபடாது. -ஞானவேல், கவுரவ தலைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை