கிராம உட்புற சாலைகளை மேம்படுத்தும் பணி துவக்கம்
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதியில் கிராம உட்புற சாலைகள் அமைக்கும் பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.15.20 லட்சம் மதிப்பில் காட்டேரிக்குப்பம் சலவை துறை பழுதுபார்த்தல், சோம்பட்டு என்.ஆர். நகர் மற்றும் மண்ணாடிப்பட்டு ராமமூர்த்தி நகரில் புதிதாக சாலை அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை அமைச்சர் நமச்சிவாயம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு மூலம் ரூ.80.57 லட்சம் மதிப்பில் திருக்கனுார், மணவெளி ஏரிகளின் நீர்வரத்து வாய்க்கால்களில் பாலம் மற்றும் சாலை அமைத்தல், கைக்கிலப்பட்டு ஏரி துார்வாரும் பணி துவங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், கொம்யூன்ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜூனன், பா.ஜ., பிரமுகர் தமிழ்மணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.