| ADDED : ஜன 11, 2026 05:44 AM
நெட்டப்பாக்கம்: தனியார் டயர் தொழிற்சாலையில், பணியில் சேர்க்க வலியுறுத்தி தொழிலாளி, தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 55. இவர் அதே பகுதியில் இயங்கி வரும் தனியார் டயர் தொழிற்சாலையில், பணிபுரிந்து வந்தார். இவருக்கு பணிபுரியும் வயது இருக்கும் போதே, தொழிற்சாலை நிர்வாகம் இவருக்கு ஓய்வு கொடுத்து அனுப்பியது. இதுதொடர்பாக, செந்தில்குமார், புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், செந்தில்குமாரை மீண்டும் வேலையில் சேர்க்க தொழிற்சாலை நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், செந்தில்குமாரை பணியில் சேர்க்காமல், தொழிற்சாலை நிர்வாகம் காலம் கடத்தி வந்தது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று மதியம் தொழிற்சாலை முன், கையில் பாதாகையுடன் தர்ணா போராட்டம் நடத்தினார். அதனை தொடர்ந்து, அவரை அழைத்து, மீண்டும் வேலை தருவதாக நிர்வாகம் கூறியதையடுத்து, அவர் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து சென்றார்.